இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதைப் பற்றி...
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும் என்று திருநெல்வேலியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை ஈரோடு, திருச்சி, கோயம்புத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
Advertisement
Advertisement
கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்கள் அப்துல் வஹாஃப், அவைத் தலைவர் அப்பாவு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ரூபி மனோகரன், வி.பி. துரை உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்திய விடுதலை போராட்டத்தில் தனி முத்திரையும் தமிழ்நாட்டு வரலாற்றில் மாபெரும் வீரத்தையும், தமிழ் காக்கும் போராட்டத்தில் கலைஞர் கருணாநிதி, அஞ்சாமல் தனிமைச் சிறையில் இருந்த தியாகத்தையும் பெற்றிருக்கக்கூடிய பாளையங்கோட்டை இருக்கும் நெல்லைச் சீமைக்கு வந்திருக்கிறேன்.
அடிமை அதிமுகவின் முதுகில் மதவாத பாஜகவின் பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து தமிழ்நாட்டைக் காக்க உங்களிடம் வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டைக் காக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா..? நீங்கள் இங்கு இருக்கக்கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறவைத்து பேரவைக்கு அனுப்ப வேண்டும்.
திருநெல்வேலிக்கு செய்த சாதனைகளை மட்டும் குறிப்பிட்டாலே ஒரு புத்தகம் போடலாம். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டுதான் பொருநை அருங்காட்சியகம். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு எங்கள் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம்.
தமிழ்நாட்டுக்குப் புதிய விடியலை தந்து இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக உயர்த்தினோம். மலையளவு சாதனைகளை நாம் செய்துள்ளோம்; இவ்வளவு சாதனைகளை செய்த துணிவோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
உரிமைத் திட்டத்திற்கு ‘குலவிளக்கு திட்டம்' என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். இதை பார்த்து மக்கள், ‘ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வார். ஆனால், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் செய்யமாட்டார் சொந்தமாகவும் செய்யமாட்டார் என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு 11-வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும்.” என்றார்.
Speaking at a campaign meeting held in Tirunelveli, Chief Minister Stalin stated that India's history should be written from the perspective of the South.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.