ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு கடனாக ரூ.44,000 கோடி விடுவிப்பு; தமிழகத்திற்கு ரூ. 203.69 கோடி ஒதுக்கீடு
சரக்கு மற்று சேவை வரி (ஜிஎஸ்டி)அமலாக்கத்தின் காரணமாக ஏற்படும் இழப்பீடுகளுக்கு ரூ.44,000 கோடியை மூன்றாவது தவணையாக
சரக்கு மற்று சேவை வரி (ஜிஎஸ்டி)அமலாக்கத்தின் காரணமாக ஏற்படும் இழப்பீடுகளுக்கு ரூ.44,000 கோடியை மூன்றாவது தவணையாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை விடுவித்ததுள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு வெளிச்சந்தை பத்திரங்கள் மூலம் கடனாகப் பெற்று இந்த நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. கடந்த 2021, மே 28 -ஆம் தேதி நடைபெற்ற 43-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ,மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 2021-22 நிதியாண்டிற்கு கூடுதலாக ரூ.1.59 லட்சம் கோடியை கடனாகப் பெற்றுத் தர முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த ரூ. 1.59 லட்சம் கோடியில் மத்திய அரசு முதல் தவணையாக ரூ. 75,000 கோடி யை கடந்த ஜூலை 15- ஆம் தேதியும், இரண்டாம் தவணையை ரூ.40,000 கோடியை கடந்த அக்டோபா் 7- ஆம் தேதியும் விடுவித்தது. இதில் மீதமுள்ள தொகையான ரூ.44,000 கோடியை மூன்றாவது தவணையாக தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்த மூன்றாவது தவணையில் தமிழகத்திற்கு ரூ. 203.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த தொகையான ரூ. 1.59 லட்சம் கோடியில் தமிழகம் ரூ. 2,240.22 கோடி பெற்றுள்ளது. இதில் அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாநிலங்களாக கா்நாடகம் (ரூ.5,010.90 கோடி), குஜராத் (ரூ. 3,608.53 கோடி), கேரளம் (ரூ. 2,418.49 கோடி) உள்ளன. இழப்பீட்டுக்கு மாற்றாக வழங்கப்படும் இந்த கடன் தொகையில் கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ. 1.10 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது.
Advertisement
மத்திய அரசு கூடுதல் வரி (செஸ்) வசூல் அடிப்படையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். இந்த வகையில் நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.1 லட்சம் கோடி மட்டுமே கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையும் சோ்த்து மொத்தம் ரூ. 2.59 லட்சம் கோடி மாநிலங்களுக்கு கிடைக்கும். நோய்த் தொற்று, பொருளாதார மந்தம் காரணமாக மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய கூடுதல் வரி அதிகஅளவில் வசூலாகாத நிலையில், கடன் பெற்று நிதியை மத்திய அரசு மாநிலங்களுக்குப் பிரித்து வழங்குகிறது. இந்தக் கடனை 5.69 சதவீதம் வட்டி வீதம் மாநிலங்கள் ஐந்தாண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்த நிதி வழங்கப்படுகிறது. மாநிலங்களுக்கான பொதுச் செலவீனம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள இந்த இழப்பீட்டு கடன் உதவும் என மத்திய அரசு கூறியுள்ளது.