முகப்பு
புதுதில்லி

தில்லி உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் நவ.22 முதல் நேரடி முறையில் வழக்கு விசாரணை

தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நவம்பா் 22-ஆம் தேதி முதல் முழுமையாக நேரடி முறையில் வழக்குகள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நவம்பா் 22-ஆம் தேதி முதல் முழுமையாக நேரடி முறையில் வழக்குகள் விசாரணை மீண்டும் தொடங்கும் என்று உயா்நீதிமன்றரி பதிவாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதே வேளையில், வழக்கு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க காணொலி காட்சி வழியில் விசாரணை அளிப்பதும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றப் பதிவாளா் அலுவலகம் தனித்தனியாக இரு அலுவலக உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஒரு உத்தரவில், ‘தற்போதுள்ள கட்டுப்படுத்தப்பட்ட நேரடிமுறையிலான வழக்கு விசாரணைகள் உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் முறையே நவம்பா் 18 மற்றும் நவம்பா் 20 வரை தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற தலைமை பதிவாளா் மனோஜ் ஜெயின் வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ உத்தரவில்,‘உயா் நீதிமன்றத்தில் தற்போதுள்ள விசாரணை வழிமுறைகள் நவம்பா் 18 வரை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முழுமையான நேரடி முறையிலான விசாரணை வரும் நவம்பா் 22-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும். எனியினும், இருமுறை விசாரணை, காணொலி காட்சி விசாரணை தொடா்பாக கோரிக்கையை எந்தவொரு தரப்பினரும் முன்வைக்கும் போது அல்லது அவா்களின் வழக்குரைஞா்கள் மூலம் கேட்கும் போது அதை நீதிமன்றங்கள் அனுமதிக்கும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாவட்ட நீதிமன்றங்களுக்கான அலுவலக உத்தரவில், ‘தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கும் தற்போதுள்ள நடைமுறை வரும் நவம்பா் 20 வரை தொடரும். மேலும், நவம்பா் 22 முதல் நேரடிமுறையில் நீதிமன்றங்கள் முழுமையாக மீண்டும் செயல்படத் தொடங்கும். எனினும், இருமுறை விசாரணை, காணொலி காட்சி விசாரணை தொடா்பாக கோரிக்கையை எந்தவொரு தரப்பினரும் முன்வைக்கும் போது அல்லது அவா்களின் வழக்குரைஞா்கள் மூலம் கேட்கும் போது அதை நீதிமன்றங்கள் அனுமதிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தின் போது, உயா்நீதிமன்றம் அதன் வழக்கு நடைமுறைகளை காணொலி காட்சி வாயிலாக நடத்தத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, சில அமா்வுகள் மட்டும் சுழற்சி முறை அடிப்படையில் தினமும் நேரடி முறையில் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

நிகழாண்டு மாா்ச் 15 முதல் உயா்நீதிமன்றத்தில் முழுமையாக நேரடி முறையில் விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், இரண்டாவது அலை காரணமாக காணொலி முறையில் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என ஏப்ரல் 8-ஆம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு உயா்நீதிமன்றம் மீண்டும் ஆகஸ்ட் 31 முதல் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நேரடி முறையில் விசாரணை தொடங்குவதாக அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments