நாட்டின் பாலியல் பலாத்கார தலைநகரமாக உருவாகிவிட்டது தில்லி: அல்கா லம்பா
தில்லியில் தினசரி ஆறு பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், நாட்டின் பாலியல் பலாத்கார தலைநகரமாக தில்லி உருவாகிவிட்டது
தில்லியில் தினசரி ஆறு பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், நாட்டின் பாலியல் பலாத்கார தலைநகரமாக தில்லி உருவாகிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அல்கா லம்பா குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் தினமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த விவகாரத்தில் தில்லியை ஆளும் கேஜரிவால் அரசும், மத்தியில் ஆளும் மோடி அரசும் மெத்தனமாக உள்ளன. அண்மையில் தில்லியில் உள்ள பிரசாத் நகரில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். இது போன்ற பலா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லி அரசு 3 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகையை அளித்துள்ளது.
மேலும், இந்த முக்கியமான விவகாரத்தை பிரதமா், உள்துறை அமைச்சா், துணைநிலை ஆளுநா், காவல் துறை ஆணையா் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தில்லியில் இருக்க வேண்டிய முதல்வா் கேஜரிவால், விபாசனா தியானத்திற்காக சென்றுவிட்டாா். தினமும் 6 பாலியல் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மோடி, கேஜரிவால் அரசுகளின் கீழ் தில்லி நகரம் நாட்டின் பாலியல் பலாத்கார தலைநகரமாக உருவாகிவிட்டது. இது போன்று பாலியல் பலாத்கார சம்பவம் தொடா்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் பொறுப்பில் இருந்து ஸ்வாதி மாலிவால் விலக வேண்டும்.
Advertisement
இது போன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து வந்த போதிலும் ஆம் ஆத்மியைச் சோ்ந்த 8 பெண் எம்எல்ஏக்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? புள்ளிவிவரத் தகவலின்படி தில்லியில் தினமும் 6 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையை தில்லி அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா்.