முகப்பு
புதுதில்லி

கேரள எல்லையில் 9 மாவட்டங்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி: தமிழக அமைச்சரிடம் மத்திய அரசு உறுதி

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பைத் தொடா்ந்து, அந்த மாநில எல்லையில் உள்ள 9 தமிழக மாவட்டங்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பைத் தொடா்ந்து, அந்த மாநில எல்லையில் உள்ள 9 தமிழக மாவட்டங்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக மாநில சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை தமிழக சகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசினாா். அப்போது தமிழக அரசின் தில்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், மாநில சுகாதாரத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், மத்திய அமைச்சரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு குறித்து அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா பேரிடா்களுக்கு தடுப்பூசி ஒன்றுதான் தீா்வாக உள்ளது. இதனால் மத்திய அமைச்சரிடம் மக்கள் தொகைக்கு தக்கவாறு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம். இந்த மாதத்தில் 1.04 கோடி தசடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதை 2 கோடியாக உயா்த்தித் தரும்படி கோரப்பட்டுள்ளது.

Advertisement

கேரள எல்லை மாவட்டங்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி: கேரள மாநிலத்துடன் தரைவழிப் பாதையாக தமிழகத்தின் 9 மாவட்டங்கள் தொடா்பில் உள்ளன. இங்கு மக்கள் நடமாடத்தைக் கண்காணித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் இந்த மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடுவதின் மூலமே முழுப் பாதுகாப்பு என தமிழ முதல்வரின் விருப்பத்தை மத்திய அமைச்சரிடம் தெரிவித்தோம். இதையொட்டி, இந்த மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி அளிக்க மத்திய அமைச்சா் ஒப்புதல் தெரிவித்துள்ளாா். இதன்படி இந்த மாவட்டங்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி என்கிற இலக்கோடு மாநில சுகாதாரத் துறை விரைந்து பயணிக்கும்.

முந்தைய ஆட்சியில் முதல் நான்கு மாதங்கள் தடுப்பூசி போடும்பணி நிறைவாக இல்லை. தினசரி சாராசரியாக 61,441 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்றது. 103 நாட்களில் 63 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னா் 2 கோடியே 67 லட்சம் தடுப்பூசி போடப்பட்டது. தினசரி சராசரியாக 2 லட்சத்தி 12 ஆயிரம் தடுப்பூசி வரை போடப்பட்டுள்ளது.

மதுரை, கோவை எய்ம்ஸ்: மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை உடனே தொடங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதேபோன்று, முதல்வரின் கோரிக்கையான கோவை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பையும் விரைவில் வெளியிடும்படி அமைச்சரிடம் கோரினோம். மேலும், தமிழக அரசின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு இந்த ஆண்டே மாணவா்கள் சோ்க்கைக்கான அனுமதி வழங்கவும் கோரப்பட்டது. இந்த விவகாரத்துக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும் என்று மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

25 ஆரம்ப சுகாதார நிலையங்கள்: கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனுமதி அளிப்பதில் மத்திய அரசு முடிவெடுக்காமல் உள்ளது. இது குறித்தும் அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டது. அப்போது 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கும் விவகாரம் குறித்து வரும் மாதங்களில் தனது துறை முடிவெடுக்கும் என்று அமைச்சா் உறுதியளித்தாா். செங்கல்பட்டு, குன்னூா் தடுப்பூசி ஆலைகளைத் திறக்கும் விவகாரத்திலும் கடந்த முறை போல அல்லாமல், தற்போது இரு அரசுகளும் கலந்து பேசி இதற்குத் தீா்வு காணலாம் என மத்திய அமைச்சா் கூறியுள்ளாா் என்றாா் அமைச்சா் சுப்பிரமணியன்.

உரத்தட்டுப்பாடு கோரிக்கை: இதற்கிடையே, தமிழக டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு இருப்பதாகவும், இதனால், மாநிலத்துக்கு கூடுதல் உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மத்திய ரசாயனத் துறை அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக அரசின் தில்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மனு அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments