தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதைப் பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிக போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் சில நாள்களுக்கு முன் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
திருமாவளவன் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.
Advertisement
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், “வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன்.
இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. இருந்தாலும், நான் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். நான் சட்டப்பேரவையில் விளிம்பு நிலை மக்களின் அரசியலைப் பேச வேண்டும் என்று, இன்றைக்கு அல்ல கடந்த 25 ஆண்டுகளாக எண்ணி இங்கு வந்திருக்கிறேன்.
2001-ல் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இரண்டரை ஆண்டுகள் பதிவியில் இருந்து ராஜிநாமா செய்தேன். பதவி மீது எனக்கு ஆசையில்லை. காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. நான் திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன்” என்றார்.