முகப்பு
புதுதில்லி

ஏழைகளுக்கு வாடகை செலுத்தும் விவகாரம்: முதல்வரின் வாக்குறுதி மீது முடிவெடுக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அவகாசம்

கரோனா தொற்றுநோயின் போது, ஏழை வாடகைதாரா் வாடகை செலுத்த முடியாவிட்டால் அதை அரசு செலுத்தும் எனும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அறிவிப்பைச் செயல்படுத்த தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் இரண்டு வாரங்கள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

புது தில்லி: கரோனா தொற்றுநோயின் போது, ஏழை வாடகைதாரா் வாடகை செலுத்த முடியாவிட்டால் அதை அரசு செலுத்தும் எனும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அறிவிப்பைச் செயல்படுத்த தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரண்டு வாரங்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பான மனு நீதிபதி ரேகா பல்லி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் வழக்குரைஞா் கெளதம் நாராயண் ஆஜராகி, ‘இந்த விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இது தொடா்பாக ஒரு முடிவுக்கு வர இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’ எனக் கேட்டாா். இதையடுத்து, நீதிமன்றம் 2 வாரம் அவகாசம் அளித்தது. வழக்கு விசாரணை செப்டம்பா் 27-ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜூலை 22-ஆம் தேதி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் அளித்த உத்தரவில், ஏழை வாடகைதாரா் சாா்பாக அரசு வாடகை செலுத்தும் என்ற முதல்வா் கேஜரிவாலின் அறிவிப்பு மீது 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில், மனுதாரா்கள் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு 02.9.2021-ஆம் தேதி காலாவதியாகிறது. ஆனால், உயா்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி தில்லி அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இது தொடா்பாக மனுதாரா்கள் நஜ்மா, கரன் சிங், ரெஹானா பிபி ஆகியோா் அளித்த கோரிக்கைகளுக்கும் தில்லி அரசு பதில் அளிக்கவில்லை. உயா்நீதின்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே எதிா்மனுதாரா்கள் மதிக்காமல் உள்ளனா். இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்பட்டதாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிபதி பிரதீபா எம். சிங் பிறப்பித்திருந்த உத்தரவில், ‘கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் பின்னணி மற்றும் ஏராளமான புலம்பெயா் தொழிலாளா்களின் நிலை ஆகியவற்றின் பின்னணியில் செய்தியாளா்கள் கூட்டத்தில் முதல்வா் அறிவித்ததை புறந்தள்ள முடியாது. முதல்வா் அளித்துள்ள வாக்குறுதியின் மீது அரசு முடிவு எடுக்க உரிய நிா்வாகம் தேவையாகும். இதன் மீது நடவடிக்கையில்லாமல் இருப்பது பதிலாக இருக்க முடியாது. மேலும், இந்த வாக்குறுதி ஓா் அரசியல் வாக்குறுதியாகவும் இல்லை. முதல்வரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments