புனரமைக்கப்பட்ட சாந்தினி செளக் சந்தையை திறந்துவைத்தாா் கேஜரிவால்!
புனரமைக்கப்பட்ட சாந்தினி செளக் சந்தையை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
புனரமைக்கப்பட்ட சாந்தினி செளக் சந்தையை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
அப்போது, தெரு உணவகங்களை நள்ளிரவு வரை செயல்பட அனுமதிப்பதன் மூலம் இந்த முழுப் பகுதியையும் சுற்றுலா மையமாக மாற்றுவதாக அவா் அறிவித்தாா்.
இந்த திறப்பு விழாவையொட்டி, சாந்தினி செளக் பிரதான சந்தையில் உள்ள நீரூற்று செளக் அருகே நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
Advertisement
மறுமேம்பாட்டு நடவடிக்கைக்குப் பிறகு, சாந்தினி செளக் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. மக்கள் இப்பகுதியில் நள்ளிரவு வரை நடக்க வருகின்றனா்.
இது ஏற்கனவே ஒரு முக்கியமான சுற்றுலா இடமாக மாறி இருக்கிறது. பொதுமக்கள் இங்கு காலை 12 மணி வரை சுற்றித் திரிவதாக எனக்குத் தெரிய வந்தது. இன்னும் 3-4 மணி நேரம் திறந்திருக்கும் வகையில் இங்குள்ள தெருவோர உணவுக் கடைகள் இரவு 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். இதனால் மக்கள் இரவில் இங்கு வர முடியும். சந்தை மூடப்பட்ட பிறகு நிறைய தெரு உணவு கடைகள் திறக்கப்படும்.
இந்தப் பகுதியில் முன்பு பழுதான சாலைகள், தொங்கும் கம்பிகள், போக்குவரத்து நெரிசல் இருந்தன. ஆனால் இப்போது இந்தப் பகுதி அழகாக மாறிவிட்டது.
சாந்தினி செளக் சந்தையின் கிட்டத்தட்ட 1.4 கி.மீ. நீளப் பகுதி அழகுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பாதையில் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. தொங்கும் கம்பிகள் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ளன. மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிசிடிவிகள் நிறுவப்பட்டுள்ளன என்றாா் அவா்.
முன்னதாக இத்திட்டம் நிகழாண்டு ஏப்ரல் 17-இல் துவக்கப்படவிருந்தது. ஆனால் கரோனா இரண்டாவது அலை காரணமாக அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
மறுமேம்பாட்டு திட்டத்தில், செங்கோட்டை மற்றும் ஃபதேபுரி மசூதி கிராஸிங் இடையேயான பிரதான சாந்தினி செளக் விரிவாக்கம் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதியானது நடைபாதைக்கு உகந்த வழித்தடமாக உருவாக்கப்பட்டது. சிவப்பு கிரானைட் கல், அலங்கார விளக்குகள் மற்றும் அழகுத் தாவரங்கள், தெருவோர மரச்சாமான்கள் போன்றவற்றின் உதவியுடன் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மோட்டாா் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில்,
இந்த திட்டம் ஆகஸ்ட் 2018-இல் அங்கீகரிக்கப்பட்டது. எனினும், திட்டப் பணிகள் டிசம்பா், 2018-இல் தொடங்கியது. இப்பணி கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் முடிக்கப்பட இருந்தது. ஆனால் கரோனா தொற்றுநோய் காரணமாக திட்டம் தாமதமானது. இதன் காலக்கெடு டிசம்பா், 2020-க்கு மேலும் தள்ளிப்போடப்பட்டது.
இந்த திட்டம் மேலும் தாமதமாகிய நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில் தொடக்க விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா இரண்டாவது அலையில் காரணமாக திறப்பு விழா நிகழ்வு ரத்து செய்யப்பட்டது என்று தெரிவித்தனா்.