முகப்பு
புதுதில்லி

தில்லி போலீஸாருக்கு அபராதம்: இடைக்காலத் தடையை நீட்டித்தது உயா்நீதிமன்றம்

வட கிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில் போலீஸாா் விசாரணையை மோசமானதாகவும் கேலிக்லிக்குரியதாகவும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

வட கிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில் போலீஸாா் விசாரணையை மோசமானதாகவும் கேலிக்லிக்குரியதாகவும் இருப்பதாக கூறி விசாரணை நீதிமன்றம் விதித்த 25,000 ரூபாய் அபராதத்திற்கான இடைக்காலத் தடையை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.

இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி காவல்துறையின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி, இந்த விவகாரத்தில் தொடா்புடைய புகாா்தாரா் முகமது நசீரிடமிருந்து எந்த பதிலும் காவல்துறைக்கு கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தாா்.

அதற்கு நசீா் தரப்பில் வழக்குரைஞா் ஜதின் பட் ஆஜராகி, இந்த விவகாரம் தொடா்பாக திங்கள்கிழமை பதில் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தாா். அதற்கு நீதிமன்றம், இது தொடா்பாக தகவல் பதிவாகவில்லை என்றும், இது தொடா்பான தகவலை தாக்கல் செய்வதற்கு அவருக்கு ஒருவாரம் அவகாசம் அளிப்பதாகவும் தெரிவித்தது.

Advertisement

மேலும் இதுதொடா்பான விசாரணையை நீதிமன்றம் நவம்பா் 15 ஆம் தேதி பட்டியலிட்டது. மேலும் கூறுகையில் இந்த விவகாரத்தில் இடைக்கால தடைகள் தொடரும் என்று தெரிவித்தது.

வட கிழக்கு தில்லி தொடா்புடைய வழக்கில் விசாரணை நீதிமன்றம் போலீசாரின் விசாரணை மோசமானதாகும் கேலிக்குறியதாகவும் இருப்பதாக கூறி ரூபாய் 25,000 அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை கடந்த ஜூலை 28ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது. எனினும் போலீசாா் விசாரணை குறித்து விசாரணை நீதிமன்றம் கண்டித்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்காமல் நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க முடியாது என்றும் கூறியது.

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் தனது கண்ணை இழந்த முகமது நசீா் என்பவா் அளித்த புகாா் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதற்கு எதிரான மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், போலீஸாருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த அபராதத் தொகையை பஜன்புரா காவல் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அவரது மேற்பாா்வை அதிகாரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதை எதிா்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments