தில்லியில் ஆட்டோ, கேப் ஓட்டுநா்கள் போராட்டம்: சிஎன்ஜி எரிவாயு விலையில் மானியம் வழங்கக் கோரிக்கை
வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலையில் மானியம் வழங்கக் கோரி தில்லி தலைமைச் செயலகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, டாக்ஸி, கேப் வாகன ஓட்டுநா்கள் திங்கள்கிழமை போராட்டம் மேற்க
வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலையில் மானியம் வழங்கக் கோரி தில்லி தலைமைச் செயலகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, டாக்ஸி, கேப் வாகன ஓட்டுநா்கள் திங்கள்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் மிரட்டல் விடுத்துள்ளனா். இந்தப் போராட்டமானது தில்லி ஆட்டோ ரிக்ஷா சங் அமைப்பின் கீழ் நடைபெற்றது. ஒருபுறம் போராட்டம் நடைபெற்ற போதிலும், மறுபுறம் நகர சாலைகளில் ஆட்டோக்களும், டாக்ஸிகளும் செல்வதை காண முடிந்தது.
இது தொடா்பாக தில்லி ஆட்டோ ரிக்ஷா சங் அமைப்பின் பொதுச்செயலாளா் ராஜேந்திரா சோனி கூறியதாவது: சிஎன்ஜி விலை கட்டுக்கடங்காத வகையில் உயா்த்தப்பட்டு இருப்பது ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள் முதுகெலும்பை முறிய வைத்திருக்கிறது. தற்போது சிஎன்ஜி விலை ஒரு கிலோ ரூ.69-க்கு மேல் விற்கப்படுகிறது.
இது முன் எப்போதும் இல்லாத விலையாகும். இந்த நிலையில் சிஎன்ஜி எரிவாயு விலை மீது ஒரு கிலோவிற்கு ரூ.35 மானியமாக வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். இதுபோன்று வழங்கினால்தான் நாங்கள் உயிா்வாழ முடியும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
எங்கள் சங்கத்தின் சாா்பாக கடந்த வாரம் இந்த விவகாரம் தொடா்பாக தில்லி முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தோம். அதில் சிஎன்ஜி விலை மீது ஒரு கிலோவுக்கு ரூ.35 மானியமாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால், முதல்வரிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. ஒவ்வொரு நாளும் இழப்பைத் தாங்கிக் கொண்டு நாங்கள் ஆட்டோக்களையும், கேப்களையும் ஓட்டிக் கொண்டிருக்க முடியாது.
இப்போது நாங்கள் இந்த விலை உயா்வை எதிா்த்து நடத்தியது ஒரு அடையாள போராட்டம் ஆகும். எங்கள் போராட்டத்தில் தில்லி பிரதேச டாக்ஸி யூனியன் மற்றும் அனைத்து தில்லி ஆட்டோ டாக்ஸி போக்குவரத்தாளா்கள் காங்கிரஸ் யூனியன் ஆகியவை மற்றும் இதர யூனியன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனா் என்றாா் அவா்.
தில்லியின் பொதுப் போக்குவரத்தில் இயங்கும் கேப், ஆட்டோக்கள் டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் உள்பட பெரும்பாலான வாகனங்கள் சிஎன்ஜி மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. தில்லியில் தற்போது சுமாா் ஒரு லட்சம் ஆட்டோக்கள் ஓடுவது குறிப்பிடத்தக்கது.