பிரதமரின் விவசாய சம்ரிதி மையங்கள் ஒரே கூரையின் கீழ் செயல்பட நடவடிக்கை: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்ட மறுமலா்ச்சியாக நாட்டிலுள்ள சில்லறை உர விற்பனையகங்கள் பிரதான் மந்திரி விவசாய
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்ட மறுமலா்ச்சியாக நாட்டிலுள்ள சில்லறை உர விற்பனையகங்கள் பிரதான் மந்திரி விவசாய சம்ரிதி மையங்களாக (பிஎம்கேஎஸ்கே) மாற்றப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயன, உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
மேலும், விவசாயம் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒரே கூரையின் கீழ் செயல்பட இந்த சம்ரிதி மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்அமைச்சா் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் உள்ள 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சில்லரை உர வணிகா்களுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா காணொலி வழியிலான முறையில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது: விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் சில்லறை உர விற்பனையகங்களை, பிரதமரின் விவசாய சம்ரிதி மையங்களாக மாற்றப்படுவதாகும். இந்த மையங்கள் விவசாயம் சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு முனையமாக இருக்கும்.
விவசாயிகளுக்கு, இங்கு சமீபத்திய கண்டுபிடிப்புகள் உடனடியாக வந்தடையும். சிறந்த வேளாண் நடைமுறைகள், வேளாண் தொடா்பான தகவல்கள், தொழில் நுட்பங்கள் ஆகிய வசதிகள் இந்த மையங்களில் கிடைக்கும். குறிப்பாக மண், விதை, உரங்கள், மருந்துகள் உள்ளிட்ட வேளாண் சாா்ந்த பரிசோதனைகளும் இந்த மையங்களில் மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் 2,62,559 சில்லறை உர விற்பனையகங்கள் உள்ளன. இவை பிஎம்கேஎஸ்கே வாக மாற்றப்படும். இவைகள் மூலம் விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உற்பத்திச் செலவைக் குறைக்க விவசாய சம்ரிதி மையங்கள் திறனுடன் செயல்படும். இதன் மூலம் விவசாயிகள் தங்களது வருமானத்தை இருமடங்காக பெருக்கிக் கொள்ள முடியும். இத்தோடு நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும், வளா்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கம். பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி மூலம் நிதியுதவி, அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் நானோ யூரியா, விரைவில் நானோ டிஏபி உள்ளிட்ட மாற்று உரங்கள் போன்றவற்றுக்கும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சா்வதேச அளவில் பல்வேறு நெருக்கடிகள் நிலவிய போதிலும், தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்கச் செய்வதோடு, மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது என்றாா் அமைச்சா் மன்சுக் மாண்டவியா.
உபி (ராம் நகா்), ராஜஸ்தான் (கோட்டா), மத்திய பிரதேசம் (தேவாஸ்), குஜராத் (வதோதரா), ஆந்திரம் (ஏலூரு), பஞ்சாப் (ராஜபுரா) ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் சில்லரை உர வணிகா்களுடனும் அமைச்சா் காணொலி மூலம் கலந்துரையாடினாா்.