தமிழக மின் உற்பத்தி நிலையங்களுக்குநிகழ் நிதியாண்டில் 112 சதவீதம் நிலக்கரி: மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி தகவல்
தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ‘சக்தி’ திட்டத்தின் கீழ் விதிமுறைகளுக்கு உள்பட்டு நிகழ் நிதியாண்டில் 112 சதவீதம் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை
தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ‘சக்தி’ திட்டத்தின் கீழ் விதிமுறைகளுக்கு உள்பட்டு நிகழ் நிதியாண்டில் 112 சதவீதம் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், முழு அளவிலான நிலக்கரி வழங்கப்பட்டதா? கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிலக்கரி அளவு எவ்வளவு? என மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினா் கே.ஆா்.என் ராஜேஷ்குமாா் எழுத்துப்பூா்வமாக கேள்வி எழுப்பி இருந்தாா்.
இதற்குப் பதிலளித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரித்துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறியிருப்பதாவது: மத்திய நிலக்கரித் துறை, ‘சக்தி‘ என்கிற கொள்கையை அறிவித்து இதன்படி, மாநில மின்துறைகளுக்கு வெளிப்படைத் தன்மையுடன் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோல் இண்டியா நிறுவனம் மூலமாக நிலக்கரியை ஒதுக்கீடு செய்கிறது. மேலும், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கும் நிலக்கரி ஒதுக்கவும் மாநில அரசு பரிந்துரை செய்தாலும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் தொடா்பாக தமிழக அரசிடம் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை.
இதனால், 2019-20, 2020-21 ஆண்டுகளில் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி கூடுதலாக நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த 2019-2020 மற்றும் 2020-21 ஆண்டுகளில் 2.4 கோடி (24 மில்லியன்) டன் வழங்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 1.6 கோடி (16 மில்லியன்) டன்கள் வரையே வழங்கப்பட்டது. அதே சமயத்தில் நிகழ் 2021-2022 ஆண்டில் ஜனவரி வரை 1.7014 கோடி (17.014 மில்லியன்) டன் வழங்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை விடக் கூ
டதலாக 1.9110 கோடி (19.110 மில்லியன்) டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது. இது 112 சதவீதமாகும்.
மேலும், தமிழக அரசு மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசின் ‘சக்தி’ திட்டம் மூலம் 100 சதவீதம் நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளில் குறைவாக வழங்கப்பட்டதற்கு காரணங்கள் உண்டு. நிலக்கரி வாங்கியதில் நிலுவைத் தொகை அதிக அளவில் வைத்திருப்பது மற்றும் நிலக்கரியை கொண்டு செல்வதற்கான வாகன தட்டுப்பாடு, கனமழை போன்ற காரணங்களால்தான் சில சமயம் நிலக்கரியை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.