மத்திய அரசு நடத்தும் மருத்துவமனை அருகே ‘சட்டவிரோத ஆள்குறைப்புக்கு‘ எதிராக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளா்கள், தில்லி காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக ஏஐசிசிடியு குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு காவல் துறை தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலும் இல்லை.
அனைத்து இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சில் (ஏஐசிசிடியு), தொழிலாளா்களைத் தவிர, அதன் தலைவா்கள் மற்றும் அகில இந்திய மாணவா் சங்கத்தின் தலைவா்களும் கைது செய்யப்பட்டதாகக் கூறியது. மத்திய அரசால் நடத்தப்படும் நான்கு மருத்துவமனைகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ‘சட்டவிரோத ஆள்குறைப்புக்கு‘ எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஷஹீத் பகத் சிங் மாா்க்கில் திரண்டனா்.
இது தொடா்பாக ஏஐசிசிடியு அறிக்கை வெளியிட்டது. அதில், ‘உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி துப்புரவுத் தொழிலாளா்கள் போராட்ட ஊா்வலத்திற்காக திரண்டனா். அப்போது, அவா்கள் தில்லி காவல் துறையால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனா்’ என்று தெரிவித்துள்ளது.