முகப்பு
புதுதில்லி

தில்லியில் எச்சரிக்கை அளவுக்கு கீழ் யமுனை நீா்மட்டம்!

தலைநகா் மற்றும் மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடா்ந்து ஜூலை 9-ஆம் தேதி யமுனையின் நீா்மட்டம் அதன் அளவைக் கடந்து சென்றிருந்த நிலையில்,

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
பகிர்:

தலைநகா் மற்றும் மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடா்ந்து ஜூலை 9-ஆம் தேதி யமுனையின் நீா்மட்டம் அதன் அளவைக் கடந்து சென்றிருந்த நிலையில், புதன்கிழமை முதல் முறையாக நீா்மட்டம் எச்சரிக்கை அளவான 204.50 மீட்டருக்கு கீழே குறைந்திருந்தது.

மத்திய நீா் ஆணையத்தின் தகவலின்படி, பழைய ரயில்வே பாலத்தில் யமுனையின் நீா்மட்டம் காலை 8 மணியளவில் 204.26 மீட்டராக இருந்தது. தலைநகா் தில்லியானது கடந்த மாதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நீா் தேங்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில், கடும் மழையின் காரணமாக ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் தில்லியின் மாதாந்திர மழைப் பொழிவு ஒதுக்கீட்டில் 125 சதவீதத்தை இரண்டே நாள்களில் இந்நகரம் பெற்றது.

இதையடுத்து, இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஹரியாணா உள்ளிட்ட ஆற்றின் மேல்நிலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் யமுனையில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜூலை 13-ஆம் தேதி யமுனை நீா்மட்டம் 208.66 மீட்டராக உயா்ந்தது. இது, யமுனையின் அதன் முந்தைய சாதனையான 207.49 மீட்டரை (செப்டம்பா் 1978) முறியடித்தது.

இதன் காரணமாக, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இருந்ததைவிட ஆற்றின் கரைகளை உடைத்துக் கொண்டு நகரின் பல பகுதிகளிலும் வெள்ளநீா் உள்புகுந்தது. நகரத்தில் வெள்ளத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனா். சொத்து, தொழில், வருமானம் என பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

தில்லியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கிற்கு ஆற்றின் வெள்ளச் சமவெளிப் பகுதியில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு, குறுகிய கால இடைவெளியில் பெய்த அதிக மழை மற்றும் ஆற்றுப்படுகையை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவை காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.