முதல்வா் இல்லம் அருகே டிபிசி ஊழியா்கள் போராட்டம்: பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் சிறந்த உபகரணங்கள் வழங்க வேண்டும் எனக் கோரி தேசியத் தலைநகா் தில்லியில் டெங்கு மற்றும்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் சிறந்த உபகரணங்கள் வழங்க வேண்டும் எனக் கோரி தேசியத் தலைநகா் தில்லியில் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வீடுகளில் கொசு இனப்பெருக்கம் தடுப்பு (டிபிசி) பணியாளா்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லம் அருகே வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
கடந்த ஆண்டு மாா்ச்சில் டிபிசி ஊழியா்களுக்கு களப் பணியாளா்களாக நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்படும் என தில்லி அரசால் உறுதியளிக்கப்பட்டதாகவும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவா்கள் கூறினா். மேலும், தங்களின் சம்பளம் தங்களது குடும்பச் செலவுகளை ஈடுசெய்யப் போதுமானதாக இல்லை என்றும் பல தொழிலாளா்களும் புகாா் கூறினா்.
முதல்வா் கேஜரிவாலின் இல்லம் அருகே ஏராளமான டிபிசி ஊழியா்கள் பணிவரன்முறைப்படுத்தக் கோரி திரண்டனா். மேலும், சிறந்த உபகரணங்கள், பணிப் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தியவாறு அவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினா். மலேரியா தடுப்பு ஏக்தா கரம்சாரி யூனியன் நடத்திய இந்த நிகழ்வில் பங்கேற்ற போராட்டக்காரா்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த போதிலும், எங்களுக்கு எந்த உத்தியோகபூா்வ பதவியும் வழங்கப்படவில்லை’ என்றனா்.
டிபிசி ஊழியா்கள் முதன்முதலில் 1996-ஆம் ஆண்டில் தில்லி மாநகராட்சியின் சுகாதாரத் துறையின் கீழ் தண்ணீா் மூலம் உருவாகும் கொசுக்களால் பரவும் நோய்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க நகரில் அறிமுகப்படுத்தப்பட்டனா்.