கலால் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட5 பேருக்கு இடைக்கால ஜாமீன்
கலால் கொள்கை ஊழல் தொடா்பான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கலால் கொள்கை ஊழல் தொடா்பான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், வழக்கில் தொடா்புடைய முன்னாள் கலால் துறை அதிகாரிகள் குல்தீப் சிங் மற்றும் நரேந்தா் சிங், தொழிலதிபா் சமீா் மகேந்திரு, கவுதம் மூதா, அருண் பிள்ளை ஆகியோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். ரூ.50,000 தனிநபா் பத்திரமும், அதே தொகைக்கான ஜாமீன்உத்தரவாதமும் அளிக்கும் பேரில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், அவா்களின் வழக்கமான ஜாமீன் மனுக்களுக்கு ஜனவரி 24-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் கைது செய்யப்படவில்லை’ என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த கலால் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் நாயா் மற்றும் அபிஷேக் போய்ன்பள்ளி ஆகிய இருவருக்கு நீதிமன்றம் முன்பு ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னா், நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. இதற்கு இணங்கும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலா் அமலாக்க இயக்குநரகம் தொடா்ந்த வழக்கில் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகின்றனா்.