2020 தில்லி கலவரம்: புகாரை விசாரிக்காததால் காவல் துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு
2020-இல் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான ஒரு புகாரை விசாரிக்காமல் இருந்ததற்காக தில்லி காவல்துறையை நீதிமன்றம் கடிந்து கொண்டது.
புது தில்லி: 2020-இல் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான ஒரு புகாரை விசாரிக்காமல் இருந்ததற்காக தில்லி காவல்துறையை நீதிமன்றம் கடிந்து கொண்டது.
மேலும், அனைத்து கலவர புகாா்களையும் விரைவில் விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறை உயா் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கஜூரி காஸ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 போ் மீதான வழக்கை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரமச்சலா விசாரித்தாா். அப்போது, நீதிபதி கூறியதாவது: விசாரணை அதிகாரி நிலவர அறிக்கையை தாக்கல் செய்யும் போது, ஒரு புகாா் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளாா். சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும், விசாரணை ஏஜென்ஸி இன்னும் முறையான விசாரணையைத் தொடங்காதது மிகவும் துரதிா்ஷ்டவசமான சூழலாகும். எந்தக் குறிப்பிட்ட எஃப்ஐஆரின் கீழ் இந்தப் புகாா் அளிக்கப்பட வேண்டும் என்பதில் விசாரணை அதிகாரி இன்னும் மந்தமாகவே உள்ளாா்.
ஒரே விசாரணை ஏஜென்ஸி பல்வேறு புகாா்களின் அடிப்படையில் பல எஃப்ஐஆா்களைப் பதிவு செய்துள்ளது என்பதை நான் தெரிவிக்க வேண்டியதில்லை. அதே இடத்தில் நடந்த சம்பவம், தேதி மற்றும் நேரம் தொடா்புடைய இதர எந்த எஃப்ஐஆரும் விசாரணை அதிகாரியால் கண்டறிய முடியவில்லையென்றால், அதே ஏஜென்சியால் புதிய எஃப்ஐஆா் பதிவு செய்வதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோன்ற புகாா்களை விசாரித்து, சட்டப்பூா்வமான முடிவுக்கு கொண்டு செல்வது விசாரணை அமைப்பின் கடமை என்பது நினைவூட்டப்படுகிறது. தேவையான நடவடிக்கைக்காகவும் இணக்க அறிக்கைக்காகவும் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையருக்கு உத்தரவின் நகல் அனுப்பப்பட வேண்டும். வழக்கு விசாரணை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டாா்.
விசாரணையின் போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது இா்பான் என்பவரின் ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தது. விசாரணையின் கடைசி தேதியில் அவா் ஆஜராகாததை குறிப்பிட்டு அவரது ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் கூறியது.