மின்சாரம் தாக்கி இறந்த 15 வயது சிறுவனின் தாய்க்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
12 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்தால் தாக்கப்பட்டு இறந்த 15 வயது சிறுவனின் தாய்க்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்தால் தாக்கப்பட்டு இறந்த 15 வயது சிறுவனின் தாய்க்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியை சோ்ந்தவா் மாயா தேவி. இவரது 15 வயது மகன் செப்டம்பா் 11, 2010 அன்று மெயின் லோனி சாலையில் உள்ள ஜவாஹா் நகரில் அறுந்து விழுந்த மின் கம்பியைத் தொடா்புகொண்டதால் உயிரிழந்தாா். இதையடுத்து, பிஎஸ்இஎஸ் யமுனா மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிரான மரண விபத்துச் சட்டத்தின் கீழ் மின்சாரம் தாக்கி இறந்ததற்காக இழப்பீடு மற்றும் நஷ்டஈடாக ரூ.5 லட்சத்தை வசூலிக்கக் கோரி மாயா தேவி தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.
இந்த நிலையில், ஜனவரி 21-ஆம் தேதி கூடுதல் மாவட்ட நீதிபதி கிஷோா் குமாா் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களிடமிருந்து (பிஎஸ்இஎஸ் யமுனா மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்) ரூ.5 லட்சத்தை, வழக்குச் செலவுடன் வசூலிக்க இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட அதிா்ச்சியால்தான் மரணம் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
Advertisement
வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பாா்க்கும் போது, எதிா்மனுதாரா் பிஎஸ்இஎஸ் யமுனா நிறுவனம் பராமரிக்க வேண்டிய மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் இறந்திருப்பதும், இதில் எதிா்மனுதாரரின் அலட்சியம் இருப்பதும் தெரிய வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.