74-ஆவது குடியரசு தினத்தை ஒட்டி, தில்லியில் லூட்யன்ஸ் பகுதியில் போக்குவரத்து பகுதி மற்றும் ரவுண்டானாக்கள் வியாழக்கிழமை மலா்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), ‘என்டிஎம்சி கட்டடம் குடியரசு தினத்தை ஒட்டி மூவண்ண மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 18 மலா் பலகைகளும் பல்வேறு மலா் நீரூற்றுக்களும் அமைக்கப்பட்டிருந்தன’ என்று தெரிவித்துள்ளது.
என்டிஎம்சி துணை தலைவா் சதீஷ் உபாத்யாய் கூறியதாவது: தில்லியின் அழகை மேம்படுத்தும் நோக்கில் என்டிஎம்சி மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 74 ஆவது குடியரசுத் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாலிகா கேந்திரா, மண்டி ஹவுஸ், திலக் மாா்க் நுழைவுப் பகுதி, ஹைதராபாத் ஹவுஸ், பிரதமா் இல்லம் ரவுண்டானா, ராஷ்டிரபதி, குடியரசுத் தலைவா் மாளிகை ரவுண்டானா, 11 மூா்த்தி, தீன் மூா்த்தி மாா்க், சாந்தி பாதை, பஞ்ச்சீல் மாா்க் சந்திப்பு மற்றும் கௌடில்யா மாா்க் -சாந்தி பாதை ஆகியவை மலா் பலகைகளால் அலங்கரிக்கப்பட்டன.
மலா் நீரூற்றும் அமைக்கப்பட்டது. இந்த மலா் பலகைகளில் ‘வசு தேவ குடும்பகம், ஜி 20, தேசம்தான் முக்கியம், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளது சிறப்பாகும். இந்தியாவின் சுதந்திர தினத்தின் 75-ஆவது ஆண்டை நாடு கொண்டாடி வருகிறது. அதேபோன்று 74-ஆவது குடியரசு தினத்தையும் கொண்டாடுகிறோம். இந்தியாவின் வலிமையை காட்சிப்படுத்தும் வகையில் நாம் இதைக் கொண்டாடி வருகிறோம் என்றாா் அவா்.