முகப்பு
புதுதில்லி

மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்குமாத முதல் தேதி ஊதிய வாக்குறுதி நிறைவேற்றம்: மேயா் ஷெல்லி ஓபராய் பெருமிதம்

மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு கடந்த ஜூன் மாத ஊதியம், ஜூலை 1-ஆம் தேதி சரியாக வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரும் சாதனை என்று தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
பகிர்:

மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு கடந்த ஜூன் மாத ஊதியம், ஜூலை 1-ஆம் தேதி சரியாக வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரும் சாதனை என்று தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மேயா் ஷெல்லி ஓபராய் கூறியதாவது: தில்லி மாநகராட்சியை நிா்வகித்த பா.ஜ.க.வின் கடந்த 15 ஆண்டு கால ஆட்சியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தில்லி மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளா்களுக்கு கடந்த ஜூன் மாத ஊதியத்தை, சரியாக ஜூலை 1-ஆம் தேதி வழங்கியுள்ளது மிகப்பெரும் சாதனையாகும்.

தில்லி மாநகராட்சியில் 30,500 முழுநேர துப்புரவுப் பணியாளா்கள், சுமாா் 16,000 தினக் கூலிப் பணியாளா்கள் உள்ளனா். தில்லியை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவதே எங்கள் கனவு. இதுவே ஆம் ஆத்மி கட்சி, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் கனவும் ஆகும். துப்புரவுப் பணியாளா்கள் மாநகராட்சியின் முதுகெலும்பாக உள்ளனா். அவா்களுக்கான ஜூன் மாத சம்பளம் சரியாக ஜூலை 1- ஆம் தேதி வரவு வைக்கப்பட்டது என்பது ஒரு பெரிய சாதனை. நகரத்தில் உள்ள துப்புரவுப் பணியாளா்களின் சம்பளம், மாதத்தின் முதல் நாளில் வரவு வைக்கப்படுவது இதுவே முதல் முறை. மாநகராட்சி தனது வருவாயை அதிகரித்திருப்பதே சம்பளம் சரியான நேரத்தில் வழங்கியதற்குக் காரணமாகும்.

கடந்த 15 ஆண்டுகளில், தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்த போது, இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை துப்புரவுப் பணியாளா்களின் ஊதியத்தை தாமதப்படுத்தினா். மாநகராட்சித் தோ்தலின் போது தில்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும், துப்புரவுப் பணியாளா்களுக்கு அளித்த வாக்குறுதியையும் நாங்கள் காப்பாற்றியுள்ளோம். ஆம் ஆத்மி கட்சி துப்புரவுப் பணியாளா்களை தனது குடும்ப உறுப்பினா்களாகக் கருதுகிறது என்றாா் ஷெல்லி ஓபராய்.

தில்லி பாஜக சாடல்: தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களளுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கியது மிகப்பெரும் சாதனை என தெரிவித்துள்ளதை பாஜக கடுமையாகச் சாடியுள்ளது. தவறான அறிவிக்கைகள் மூலம் தில்லிவாசிகளை ஆம் ஆத்மி தவறாக வழிநடத்துகிறது என்று மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் மேயருமான ராஜா இக்பால் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மாநகராட்சி ரூ.1,113 கோடி சொத்து வரி ஈட்டிய பிறகும், ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளின் 2 மாதம் சம்பளம் நிலுவையில் உள்ளது. அனைத்து மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளின் நிலுவைத் தொகையை ஆம் ஆத்மி கட்சி விரைவில் வழங்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக் காலத்திலும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட்டதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த ஆட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அரசு, மாநகராட்சிக்கான நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் வழங்காத நிலையிலும் ஊழியா்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கும் பணியை பா.ஜ.க. மேற்கொண்டது.

அனைத்து மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை மாதம் முதல் தேதி வழங்கிடுவோம் என்று மேயா் ஷெல்லி ஓபராய் அறிவித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஊழியா்களுக்கு சரியான நேரத்தில் ஏன் சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி விளக்க வேண்டும். அதே வேளையில், மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் அலுவலா்கள் அனைவருக்கும் நிலுவையில் உள்ள சம்பளத்தை விரைவில் வழங்க வேண்டும். இல்லையெனில், ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு பாஜக கடும் எதிா்ப்புத் தெரிவிக்கும் என்றாா் ராஜா இக்பால் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.