முகப்பு
தமிழ்நாடு

5 மாநில தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் ரூ. 400 கோடியைத் தாண்டியது!

5 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலுக்காக நடத்தப்பட்ட சோதனைகள் குறித்து...

Updated On : 26 மார்ச், 2026 at 3:11 PM
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம். - படம்: கோப்பிலிருந்து....
பகிர்:

அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலுக்காக நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ. 400 கோடியைத் தாண்டியது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகளை (MCC) மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்கள் கடுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 24, 2026 அன்று தேர்தல் ஆணையம் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. இதில் தேர்தல் நடக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் 12 எல்லை மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEOs), காவல்துறை தலைமை இயக்குநர்கள் (DGPs) மற்றும் மூத்த அதிகாரிகள், அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. வன்முறையற்ற, மிரட்டல் இல்லாத மற்றும் தூண்டுதல்கள் இல்லாத தேர்தலை உறுதி செய்யுமாறு அவர்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய, மாநிலங்கள் முழுவதும் 5,173-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இது தவிர, வெவ்வேறு இடங்களில் திடீர் வாகனச் சோதனைகளை மேற்கொள்ள 5,200-க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மின்னணு பறிமுதல் மேலாண்மை அமைப்பு பிப்ரவரி 26 முதல் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, மார்ச் 25, 2026 வரை ரூ. 408.82 கோடிக்கும் அதிகமான சட்டவிரோதப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ. 17.44 கோடி ரொக்கம், ரூ. 37.68 கோடி மதிப்பிலான மதுபானம் (16.3 லட்சம் லிட்டர்), ரூ. 167.38 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ரூ. 23 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ. 163.30 கோடிக்கும் அதிகமான இதர இலவசப் பொருள்கள் அடங்கும்.

சோதனைகளின் போது சாதாரண குடிமக்கள் எவ்வித சிரமத்திற்கும் அல்லது துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் இருப்பதை அமலாக்கத் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான புகார்களைத் தீர்க்க மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து குடிமக்கள் அல்லது அரசியல் கட்சிகள் ECINET-ல் உள்ள C-Vigil Module மூலம் புகார் அளிக்கலாம்.

மார்ச் 15 முதல் மார்ச் 25 வரை, சி-விஜில் (C-Vigil) செயலி மூலம் 70,944 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 70,831 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன, மேலும் 67,899 புகார்கள் (அதாவது 95.8%) 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளன.

புகார்களைத் தெரிவிக்க 1950 என்ற தகவல் அழைப்பு மைய எண் (Call Centre number) உள்ளிட்ட புகார் குறைதீர்க்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அதிகாரி (DEO) அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் (RO) புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The value of seized items in raids conducted for the general elections to the state assemblies of Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal exceeded Rs. 400 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.