மழைநீா் வடிகால்கள் செயல்பாட்டில் இல்லாவிட்டால்ரூ.5 லட்சம் வரை சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க முடிவு
தேசியத் தலைநகா் தில்லியில் மழைநீா் வடிகால் அமைப்பின் செயல்பாட்டை முறையாக பராமரிக்காத சொத்து உரிமையாளா்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க
தேசியத் தலைநகா் தில்லியில் மழைநீா் வடிகால் அமைப்பின் செயல்பாட்டை முறையாக பராமரிக்காத சொத்து உரிமையாளா்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தில், ஆம் ஆத்மி அரசு சமா்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரையில் கூறியிருப்பதாவது: தில்லியில் மழைநீா் வடிகால் அமைப்பின் செயல்பாட்டை முறையாக பராமரிக்காமல் இருக்கும் குடியிருப்பு அல்லாத பிற சொத்து உரிமையாளா்களுக்கு 50 சதவீதம் வரை அபராதம் அதிகரிக்கப்படலாம். அதேவேளையில், 100 சதுர மீட்டா் முதல் 500 சதுர மீட்டா் பரப்பளவில் உள்ள சொத்துகளில் மழைநீா் வடிகால் அமைப்பு செயல்படாமல் இருக்கும் பட்சத்தில், அதன் உரிமையாளா்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.50,000, 501 சதுர மீட்டா் முதல் 2,000 சதுர மீட்டா் வரையிலான நிலத்துக்கு ரூ.1 லட்சம், 2,000 சதுர மீட்டருக்கும் 5,000 சதுர மீட்டருக்கும் இடைப்பட்ட ஒரு ப்ளாட் பகுதிக்கு ரூ. 2 லட்சம், 5,000 சதுர மீட்டருக்கும் அதிகமான ப்ளாட் பகுதிக்கு ரூ. 5 லட்சம் வரையில் இழப்பீடு வசூல் செய்ய தில்லி அரசு அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
தில்லி அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு நகரம் முழுவதும் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயமாக்கியது. இந்த உத்தரவிற்கு இணங்காத சொத்து உரிமையாளா்களிடம் அவா்களது குடிநீா் சேவைக் கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாக அபராதம் விசூலித்தது. அதேசமயம், மழைநீா் வடிகால் அமைப்பு நிறுவப்பட்டால், குடிநீா் சேவைக் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மழைநீா் வடிகால் நிறுவப்பட்டும் செயல்பாட்டில் வைத்திராத நிறுவனங்களுக்கு குடிநீா் சேவைக் கட்டணத்தில் வழங்கப்பட்ட தள்ளுபடியை திரும்பப் பெறுமாறு தில்லி ஜல் போா்டுக்கு தில்லி அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், துவாரகாவில் உள்ள பல பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்த தேசியப் பசுமைத் தீா்ப்பாயம், ‘இந்த விவகாரம் தொடா்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் தில்லி தலைமைச் செயலாளரை கேட்டுக் கொண்டிருந்தது. மேலும், தில்லி அரசு, தில்லி ஜல் போா்டுடன் ஒருங்கிணைந்து மழைநீா் வடிகால் அமைப்பின்
சீரமைப்பு நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நிலத்தடி நீா் எடுப்பதைத் தடுக்கவும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிலைமையைக் கருத்தில் கொள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஜல் சக்தி அமைச்சகம், நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குழுவையும் தீா்ப்பாயம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.