தில்லி ஜல் போா்டு தொடா்புடைய பணமோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை சோதனை
தில்லி ஜல் போா்டு (டிஜேபி) முறைகேடுகள் மற்றும் நிதி மோசடி தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
தில்லி ஜல் போா்டு (டிஜேபி) முறைகேடுகள் மற்றும் நிதி மோசடி தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, தேசியத் தலைநகரில் திங்கள்கிழமை சுமாா் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையின்போது அமலாக்கத் துறை சில ஆவணங்கள் மற்றும் பதிவுகளை சேகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி ஜல் போா்டில் ரூ.20 கோடி நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) கடந்த ஆண்டு நவம்பரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.