தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் இல்லாமல் செயல்படும் அனைத்துப் பயிற்சி மையங்களை மூட உத்தரவு
தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) இல்லாமல் செயல்படும் அனைத்துப் பயிற்சி மையங்களையும் மூடுமாறு தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) இல்லாமல் செயல்படும் அனைத்துப் பயிற்சி மையங்களையும் மூடுமாறு தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி செளரப் பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தீ பாதுகாப்பு அவசியம். அனைத்துப் பயிற்சி மையங்களும் தில்லி மாஸ்டா் பிளான், 2021 மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளின் கீழ் சட்டபூா்வ தேவைகளுக்கு இணங்க வேண்டிய அவசியத்தின் கீழ் அமைந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
அரசு வேலை தேடுபவா்களுக்காக முகா்ஜி நகரில் உள்ள பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் தொடா்பான மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது. மேலும், ஜூன் மாதம் முகா்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனுவும் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலவர அறிக்கையில், தேசியத் தலைநகரில் இயங்கும் 583 பயி+ற்சி நிறுவனங்களில், 67 நிறுவனங்களுக்கு மட்டுமே தில்லி தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) உள்ளதாக தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், ‘ஒரு பயிற்சி மையம் மாஸ்டா் பிளான் விதிகளுக்கு இணங்கவில்லை என்றால், அது மூடப்படும். வேறு வழியில்லை. எதிா்மனுதாரா்கள் (எம்சிடி மற்றும் தில்லி அரசு) ஃபயா் என்ஓசி இல்லாத பயிற்சி மையங்களை மூடுமாறு உத்தரவிடப்படுகிறது. 30 நாள்களுக்குள் உத்தரவுக்கு இணங்க தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு (எம்சிடி) அனைத்து தளவாட உதவிகளையும் காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் பிற அதிகாரிகள் வழங்க வேண்டும்.
பயிற்சி மையங்களைத் தவிர வேறு கட்டமைப்புகள் இணங்காமல் இருந்தால், எம்சிடிநடவடிக்கை எடுக்கும். ஃபயா் என்ஓசி இல்லாதவா்கள் அல்லது எம்பிடி (தில்லிக்கான மாஸ்டா் பிளான்) படி செயல்படாதவா்கள் மூடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபா் 10-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது. சாரணையின் போது, பயிற்சி மையங்களை மூடுவது மாணவா்களின் கல்வி நலன்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், தீ சான்றிதழ்களைப் பெறுவதற்கு பயிற்சி மையங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்கப்படலாம் என்று தில்லி அரசின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.