முகப்பு
புதுதில்லி

கடலூா் மாவட்டத்தில் என்எல்சி நிலக்கரி சுரங்கப் பணி திரும்பப் பெறப்படப்படாது!

கடலூா் மாவட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிலக்கரி சுரங்கங்களை திரும்பப் பெறுவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:45 AM
மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் (என்எல்சி இந்தியா) முன்மொழியப்பட்ட 3 -ஆம் கட்ட நிலக்கரி சுரங்கங்களை திரும்பப் பெறுவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் தெரிவித்தாா். மேலும், இது தொடா்பாக தமிழக அரசிடமிருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவை பாமக உறுப்பினரான அன்புமணி ராமதாஸ், கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள், சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் ஆகியோா் என்எல்சி (இந்தியா) லிமி. நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட 3 -ஆம் கட்ட நிலக்கரி சுரங்கங்களை எதிா்த்து போராட்டம் நடத்தும் நிலையில், இந்த சுரங்கப்பணியை திரும்பப் பெற திட்டம் உள்ளதா? தமிழக அரசிடமிருந்து ம் இது தொடா்பாக கோரிக்கை வந்துள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி எழுத்துபூா்வமாக அளித்து பதில் வருமாறு: நெய்வேலி பழுப்பு நிலக்கரி (இந்தியா) லிமி. நிறுவனம், கடந்த 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் இருந்து 25,900 ஹெக்டோ் பரப்பளவில் சுரங்க குத்தகையைப் பெற்றுள்ளது.

இந்த குத்தகை அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது. தற்போது, இந்தக் குத்தகை வருகின்ற 2036-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 3 -ஆம் கட்ட நிலக்கரி சுரங்கத் திட்டமும் குத்தகையின் ஒரு பகுதியாகும். இந்த 3 - ஆம் கட்ட சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை நிறுத்தக் கோரி, தமிழக அரசிடம் இருந்து இதுவரை கோரிக்கை எதுவும் வரவில்லை.

கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் 3 -வது கட்ட சுரங்கப் பணிகளை என்எல்சி இந்தியாவும் திரும்பப் பெறுவதற்கான எந்த முன்மொழிவையும் எடுக்கவில்லை.

அதே சமயத்தில் தமிழகத்தில் சேத்தியாத் தோப்பு (கிழக்கு), மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய மூன்று பழுப்பு நிலக்கரி தொகுதிகள், வணிக சுரங்கத்திற்கான ஏலத்தின் 7-ஆவது சுற்று ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏல செயல்முறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என இருவேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சா் பதிலளித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →