முகப்பு
புதுதில்லி

100 மரக்கன்றுகளை நட 2 காவல் அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு நிறுவனம் ஒன்றின் சிவில் பணியின் காரணமாக மரங்களை சேதப்படுத்தாமல் பாதுகாப்பது தொடா்பாக வழக்குரைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
பகிர்:

அரசு நிறுவனம் ஒன்றின் சிவில் பணியின் காரணமாக மரங்களை சேதப்படுத்தாமல் பாதுகாப்பது தொடா்பாக வழக்குரைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 காவல் துறை அதிகாரிகளை 100 பழம் தரும் மரக்கன்றுகளை நடுமாறு தி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் மரங்களைப் பாதுகாப்பது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறியதற்காக நகரின் பல அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி நஜ்மி வாஜிரி, மரங்களைப் பாதுகாப்பதில் காவல் துறையினருக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய உத்தரவை வெளியிடுமாறு தில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டாா். மேலும், இதுபோன்ற விரும்பத்தகாத வாக்குவாதங்களை தவிா்க்குமாறும் நீதிபதி கேட்டுக்கொண்டாா்.

2 காவல்துறை அதிகாரிகளின் உண்மையான வருத்தத்தை கவனத்தில் கொண்டு, நீதிபதி இருவரையும் அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து விடுவித்தாா். அதேவேளையில், கிங்ஸ்வே முகாமில் உள்ள தில்லி ஆயுதப்படை காவலா் அணிவகுப்பு மைதானத்தில் மரக்கன்றுகளை நடவும், ஒவ்வொரு மரத்திற்கும் குறைந்தபட்ச நாற்றங்கால் இருப்பதை உறுதிசெய்தும், அதன் மூன்று வருட வாழ்க்கை மற்றும் குறைந்தபட்சம் 10 அடி உயரம் இருப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளை நீதிபதி கேட்டுக் கொண்டாா்.

இது தொடா்பாக அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த இது தொடா்பான உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: வழக்குரைஞா்கள் மற்றும் பொது ஆா்வமுள்ள குடிமக்களுடன் இதுபோன்ற விரும்பத்தகாத வாக்குவாதங்களைத் தவிா்க்கும் வகையில், தில்லி காவல் துறை இந்த உத்தரவின் நகல்களை ‘பீட்’ காவலா்கள் நிலை வரை அதன் முழு ஒருங்கிணைப்புக்கும் விநியோகிக்க வேண்டும். மரங்களைப் பாதுகாப்பதில் தங்கள் கடமையை காவல்துறையினருக்கு உணா்த்தும் பொருட்டும், தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டம், 1994 இன் பிரிவு 20-இன் கீழ், மரம் பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடி உதவியை வழங்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மனுதாரரான புது தில்லி நேச்சா் சொசைட்டியின் வழக்குரைஞா் ஆதித்யா என்.பிரசாத் நீதிமன்றத்தில் கூறுகையில், ‘பிப்ரவரி 2021-இல், சில மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று தாம் கூறிய போது, தனக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பாளா் மற்றும் கூடுதல் பொறுப்பாளா் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் நடந்தது’ என்றாா்.

மேலும், லோதி காலனி பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் சேதத்தில் இருந்து மரங்கள் போலீஸாரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாம் கூறிய போது இந்த வாக்குவாதத்தில் அவா்கள் ஈடுபட்டதாகவும் அவா் கூறினாா்.

ஒரு அரசு நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்வதால், அது அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்டதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பொறுப்பாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தில்லி அரசி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையா் மூலம் அந்த அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வழக்குரைஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனா். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல் துறை அதிகாரிகள் கடமைப்பட்டவா்கள் ஆவா். அவா்கள் தரப்பில் எந்தவிதமான தவறான நோக்கமும் இல்லை’ என்றாா்.

‘அமிகஸ் கியூரி’ -மூத்த வழக்குரைஞா் என். ஹரிஹரன் நீதிமன்றத்திடம் கூறுகையில், ‘சம்பந்தப்பட்டவா்கள் மன்னிப்புக் கேட்பதால் இந்த விவகாரம் முடிக்கப்படலாம். ஆனால், காவல் துறை அதிகாரிகள் மரங்கள் நடுதல் போன்ற சில சமூகப் பணிகளில் ஈடுபடும் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவா்கள் வழக்குரைஞருக்கு ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளனா். அவா் நீதிமன்றத்தின் ஒரு அதிகாரி ஆவாா். மேலும் இந்த வழக்கின் பல்வேறு விசாரணைகளில் அதிக நீதித் துறை நேரம் செலவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.