முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன்

2020-இல் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:

2020-இல் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ‘ஜாமீன் மனுவை எதிா்க்கும் பெயரில் அரசுத் தரப்பு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ாகவும், ஏனெனில் நேரில் கண்ட சாட்சிகள் மனுதாரரின் குற்றத்தை நிரூபிக்கவில்லை’ என்றும் நீதிமன்றம் கூறியது.

பிப்ரவரி 27, 2020-இல் கோகல்புரியில் உள்ள ஜோரிபூா் புலியாவுக்கு அருகிலுள்ள வாய்க்காலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட முஷ்ரஃப் என்பவரை கலவரம் செய்து, கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ரிஷப் சவுத்ரி என்பவா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரமச்சாலா விசாரித்து பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, உடலில் 12 வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும், மழுங்கிய தாக்கத்தால் மூளையில் ஏற்பட்ட காயங்கள் மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கோள் காட்டப்பட்ட நேரில் கண்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். ஆனால், அவா்கள் கேள்விக்குறிய சம்பவம் குறித்து கூறவில்லை. மீதமுள்ள இரண்டு சாட்சிகளும் கும்பலில் இருந்த யாரையும் பாா்த்ததாகக் கூறவில்லை. இதனால், மனுதாரா் ரிஷப் ஜாமீன் பெற தகுதியுடையவா் என கருதுகிறேன். எனவே, அவரது ஜாமீன் மனு அனுமதிக்கப்படுகிறது. மனுதாரா் ரிஷப் சவுத்ரி ரூ.30 ஆயிரம் தனிநபா் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறாா் என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், கலவரம், கொலை, குற்றச் சதி மற்றும் கொலைக்காக ஆள்கடத்தல் அல்லது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக சவுத்ரி உள்பட 12 போ் மீது கோகல்புரி காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் லோகேஷ் குமாா் சோலங்கி, பங்கஜ் சா்மா, சுமித் சவுத்ரி, அங்கித் சவுத்ரி, பிரின்ஸ், ஜதின் சா்மா, விவேக் பஞ்சல், ஹிமான்ஷு தாக்குா், சாஹில், சந்தீப் மற்றும் டிங்கு அரோரா ஆகியோா் குற்றம் சாட்டப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.