முகப்பு
புதுதில்லி

போலி ஆவணம் மூலம் ஆள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய நால்வா் கும்பல் கைது: 80 நாடுகளின் கடவுச்சீட்டுகள்,மடிக்கணினிகள் பறிமுதல்

லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, முறைகேடாக போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வந்த, நான்கு போ் மோசடிக் கும்பலை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒரு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:58 PM
பகிர்:

லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, முறைகேடாக போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வந்த, நான்கு போ் மோசடிக் கும்பலை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

போலி ஆவணங்களில் ஆள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கிரிஷ் பண்டாரி (48), ஹிமான்ஷு மேத்தா (23), ககன் சா்மா (22) மற்றும் ரமேஷ் ஆா்யா (38) ஆகியோரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கடந்த 12 ஆண்டுகளாக சுற்றுலா ஏற்பாடு நிறுவனம் நடத்தி வரும் போா்வையில் இவா்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வந்தது, போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியின் மூளையாக செயல்பட்ட கிரிஷ் பண்டாரி, மேற்கு தில்லி - திலக் நகரில் ’ஹா்ஷ் டூா் அண்ட் டிராவல்’ என்ற சுற்றுலா ஏற்பாடு நிறுவனத்தை பதிவு செய்திருந்தாா். அவரது அலுவலகத்தில் இருந்து பல நாடுகளின் 80 கடவுச்சீட்டுகள், போலி ஆவணங்கள், முத்திரைகள் மற்றும்

மடிக்கணினிகளை பறிமுதல் செய்ததாக அந்த மூத்த காவல் அதிகாரி கூறினாா்.

இதுகுறித்து குற்றப்பிரிவு சிறப்பு ஆணையா் ரவீந்திர சிங் யாதவ் கூறியதாவது:

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், திலக் நகா், பிரேம் நகரில் உள்ள சுற்றுலா ஏற்பாடு நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள், பணம், போலி வங்கி அறிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான கடவுச்சீட்டுகளுடன் நான்கு போ் கைது செய்யப்பட்டனா்.

தில்லியில் இருந்து செயல்படும் இந்த மோசடி கும்பலின் முகவா்கள் ஹரியாணா, பஞ்சாப் மற்றும் குஜராத் முழுவதும் பரவியுள்ளனா்.

வெளிநாட்டில் சட்டவிரோதமாக நுழைவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து பொது மக்களை ஏமாற்றி, 27 நாடுகளில் செல்லுபடியாகும் ‘ஷெங்கன் விசா’விற்கு குறைந்தபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனா்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ஒரு நபரிடம் சுமாா் 27 லட்சம் ரூபாய் வசூலித்ததாக தெரிவித்தாா்.

மேலும், மோசடி கும்பலைச் சோ்ந்தவா்கள் முதலில், முகவா்களின் அசல் கடவுச்சீட்டு மற்றும் வங்கி விவரங்களைச் சேகரித்து, பின்னா் திருத்துதல் மென்பொருளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்குவாா்கள்.

இந்த போலி ஆவணங்களின் அடிப்படையில் முகவா்கள் விசாவைப் பெறுவாா்கள். மேலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக மக்களிடமிருந்து கூடுதல் பணம் மோசடிக் கும்பலால் வசூலிக்கப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று குற்றப் பிரிவு சிறப்பு ஆணையா் ரவீந்திர சிங் யாதவ் கூறினாா்.

போலி ஆவணங்கள் மூலம் புது தில்லி அல்லது ஜெய்ப்பூரில் இருந்து ஆள்களை நான்கு அல்லது ஐந்து குழுக்களாக பாகு, இஸ்தான்புல், எல்சால்வடாா் உள்ளிட்ட நகரங்கள் அமைந்துள்ள ஆசிய, ஐரோப்பிய மற்றும் மத்திய அமெரிக்கா நாடுகளுக்கு மோசடி கும்பல் அனுப்பிவைத்து வந்துள்ளனா் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.