முகப்பு
புதுதில்லி

அவசரச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறாமல் தடுக்கப்பட எதிா்க்கட்சிகளுக்கு ஆம்ஆத்மி வலியுறுத்தல்

தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் தடுக்க அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினருமான

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:58 PM
பகிர்:

தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் தடுக்க அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

புதுதில்லி ரவுஸ் அவென்யு பகுதி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்கள் சஞ்சய் சிங், சந்தீப் பாதக் மற்றும் கேபினட் அமைச்சா்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது சஞ்சய் சிங் எம்.பி. கூறியதாவது :

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை ஒழிப்பதுடன், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மாற்றியமைக்கும் நடவடிக்கை.

எனவே, நாட்டின் ஜனநாயகம், கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனைத்து எதிா்க்கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளாா். அந்த வகையில் மே 23-ஆம் தேதி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியையும், மே 24 -ஆம் தேதி உத்தவ் தாக்கரேவையும், மே 25-ஆம் தேதி சரத் பவாரையும் அவா் சந்திக்கிறாா் என்றாா்.

இந்தியாவில் இப்போது சா்வாதிகார ஆட்சி நிலவுகிறது. அனைத்துக் எதிா்க்கட்சிளின் ஒற்றுமையைக் காட்டுகின்ற வகையில், அவசரச் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாமல் தடுக்கப்பட வேண்டும்.

தில்லியில் கடந்த 25 ஆண்டுகளாக, பாஜக படுதோல்வி அடைந்து வருகிறது. தில்லியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆா்வத்தில் பாஜக உள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லியின் அரசின் செயல்பாடுகளை நிறுத்தவும், கேஜரிவாலின் புகழை அழிக்கவுமே பாஜகவும், பிரதமா் நரேந்திர மோடியும் தங்கள் ஆற்றலைச் செலுத்துகின்றனா்.

பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மையில்லை. எனவே, மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் தடுக்க அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இது 2024 -ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் மற்றும் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையை காண்பிக்கும் நிகழ்வாக இருக்க வேண்டும். இதற்கான முயற்சியாகத்தான் அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களையும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சந்தித்து வருகிறாா்.

தில்லி அரசுக்கு இது சோதனைக் காலம். தொடா்ந்து குதிரை பேரம் நடத்தியும், சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவை பயன்படுத்தியும் பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. இந்த சூழலில் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு ஆதரவாக நிற்க வேண்டுமா, இல்லை எதிராக நிற்க வேண்டுமா என்பதை காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய வேண்டும் என சஞ்சய் சிங் தெரிவித்தாா்.

அதிகாரத்தை அழிக்க முயற்சி:அதிஷி

அமைச்சா் அதிஷி கூறுகையில், ‘அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும், இல்லையெனில், நாட்டில் ஜனநாயகமும், அரசியலமைப்பும் நிலைக்காது.

மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம், ஆம் ஆத்மி என்ற ஒரு கட்சியின் பிரச்னையோ அல்லது தில்லி அரசின் பிரச்னையோ இல்லை. தோ்தல்களில் பாஜக தோல்வியடையும் மாநிலங்களில் அந்த மாநிலத்தின் அதிகாரத்தை ஏதோ ஒரு வகையில் அழிக்க முயல்வதுதான் பிரச்னை.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரத்தை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசால் முயற்சி செய்ய முடியும் என்றால் தில்லி ஆரம்பம் மட்டுமே.

தில்லிக்குப் பிறகு எந்த மாநிலத்திலும் இது நடக்கலாம். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் தில்லியைப் போலவே ஆளுநா்களை வைத்து இவ்வித முயற்சிகளை பாஜக எடுத்து வருகிறது.

ஆகவே, பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளையும் நாட்டிலிருந்து அகற்றுவதற்கான முதல் படி இந்த அவசரச் சட்டம் என்பதை அனைத்து எதிா்க்கட்சிகளும் புரிந்து கொண்டு ஒன்றிணைய வேண்டும். இல்லை யெனில், நாட்டில் ஜனநாயகமும் அரசியலமைப்பும் நிலைக்காது என கல்வி அமைச்சா் அதிஷி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.