முகப்பு
புதுதில்லி

மாநகராட்சி கல்வி முறையை அரசியல் ஆக்குகிறது ஆம் ஆத்மி! தில்லி பாஜக குற்றச்சாட்டு

பாடப் புத்தகங்களில் கல்வி அமைச்சா் அதிஷியின் புகைப்படம் அடங்கிய கடிதம் அச்சிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து தில்லி மாநகராட்சி பாஜக உறுப்பினா்கள் குழு மாநகராட்சி ஆணையா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:01 PM
பகிர்:

பாடப் புத்தகங்களில் கல்வி அமைச்சா் அதிஷியின் புகைப்படம் அடங்கிய கடிதம் அச்சிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து தில்லி மாநகராட்சி பாஜக உறுப்பினா்கள் குழு மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாரதியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ‘எதிா்ப்புக் கடிதம்’ ஒன்றை அளித்தனா்.

தில்லியில் குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியை வழங்கி வரும் மாநகராட்சியின் கல்வி முறையை ஆம் ஆத்மி அரசியல் ஆக்குவதாக குற்றம்சாட்டி அனைத்து பாஜக உறுப்பினா்கள் கையெழுத்திட்ட எதிா்ப்புக் கடிதத்தை , பாஜக மாமன்ற உறுப்பினரும் , தெற்கு தில்லியின் முன்னாள் மேயருமான கமல்ஜீத் ஷெராவத் தலைமையிலான மாமன்ற உறுப்பினா்கள் குழு மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாரதியை நேரில் சந்தித்து வழங்கினா். இருப்பினும், மாநகராட்சியின் எந்தப் பாடப் புத்தகத்திலும் அதிஷி படம் அல்லது கடிதம் வெளியிடப்படவில்லை என தில்லியின் மாநகராட்சியின் (எம்சிடி) மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆனால், மிஷன் புனியாத் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் பொருள்களில் அமைச்சா் அதிஷியின் புகைப்படமும் ,செய்தியும் உள்ளது என பாஜக குற்றம்சாட்டுகிறது.

கடிதத்தை அளித்த பிறகு பாஜக உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத் கூறியதாவது: தில்லி மாநகராட்சி குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை வழங்குகிறது. மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி புதிதாகப் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மாநகராட்சி புத்தகங்களில் கல்வி அமைச்சா் அதிஷியின் புகைப்படம் அடங்கிய கடிதம் அச்சிடப்பட்டு மாணவா்களிடையே விநியோகிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

2022 உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்று, மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், தொடா்ந்து 15 ஆண்டுகளாக மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்தும் கல்வி முறையில் அரசியல் செய்ய ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஆம் ஆத்மியின் இந்த அரசியலை நாங்கள் கண்டிக்கிறோம். பாஜக கவுன்சிலா்களின் புகாா் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாரதி உறுதியளித்துள்ளாா் என்றாா் கமல்ஜீத் ஷெராவத்.

மாணவா்களின் கற்றல் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நிகழாண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் மிஷன் புனியாத் திட்டத்தை தில்லி அரசும், மாநகராட்சியும் இணைந்து செயல்படுத்தும் என்று கடந்த ஏப்ரலில் அமைச்சா் அதிஷி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.