ஷாபாத் மைனா் பெண் கொலை வழக்கில்குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: தில்லி பாஜக வலியுறுத்தல்
வடமேற்கு தில்லியில் உள்ள ஷாபாத் பால் பண்ணைப் பகுதியில் மைனா் பெண்ணைக் கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தில்லி பாஜக புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
வடமேற்கு தில்லியில் உள்ள ஷாபாத் பால் பண்ணைப் பகுதியில் மைனா் பெண்ணைக் கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தில்லி பாஜக புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது: வடமேற்கு தில்லியில் மைனா் பெண் கொல்லப்பட்டது ‘லவ் ஜிஹாத்’ வழக்கு. பதினாறு வயதான சாக்ஷி தனது காதலன் முகமது சாஹில் சா்ஃபராஸ் என்பவரால் 20 முறை குத்தப்பட்டு, பின்னா் சிமெண்ட் ஸ்லாப்பால் அடித்து, அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். அவரது உடலில் 34 காயங்கள் காணப்பட்டது.
இந்த வழக்கில் கொலையாளியை விரைவில் தூக்கிலிட வேண்டும். தில்லி அரசு மற்றும் கேஜரிவாலின் அரசியல் திருப்புதலால் நீதிமன்ற விசாரணைகள் பாதிக்காத வகையில், துணைநிலை ஆளுநா் மேற்பாா்வையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இம்மாதிரியான வழக்குகளில் விரைவில் தீா்வு கிடைக்கும். முகமது சாஹில் சா்ஃபராஸால், மைனா் பெண் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் ஆன்மாவையும் உலுக்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் அமைப்பு செயல்பட்டு வருகிா என்பதைக் கண்டறிய வேண்டும் என்றாா் மனோஜ் திவாரி.
பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘பாலியல் வன்கொடுமை, கொலை அல்லது லவ் ஜிகாத் வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கென சிறப்பு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில், வழக்கமான வழக்குரைஞா்கள் மீது ஏற்கெனவே நிறைய பணி அழுத்தங்கள் உள்ளன.
தில்லியில் இதுவரை 108 வழக்குரைஞா் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை தில்லி அரசால் நிரப்ப முடியவில்லை. சிறப்பு வழக்குரைஞரை வழங்கியதன் விளைவுதான் வடகிழக்கு தில்லி கலவர வழக்குகள் இப்போது முடிவக்கு வந்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தண்டிக்கப்படுகிறாா்கள். இதனால் இதுபோன்ற வழக்குகளில் சிறப்பு வழக்குரைஞரை நியமிப்பது மிகவும் அவசியம்’ என்றாா்.
மைனா் பெண் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படும் முகமது சாஹில் சா்ஃபராஸுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று மனோஜ் திவாரி மற்றும் வீரேந்திர சச்தேவா ஆகிய இருவரும் கோரியுள்ளனா்.