உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியை சந்திக்க திகாா் சிறையிலிருந்து வந்தாா் மனீஷ் சிசோடியா
தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பண மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா நீதிமன்ற அனுமதியுடன் அவரது மனைவியை சனிக்கிழமை நேரில் சந்தித்தாா்.
தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பண மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா நீதிமன்ற அனுமதியுடன் அவரது மனைவியை சனிக்கிழமை நேரில் சந்தித்தாா்.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி
செய்தது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி சீமா சோடியாவை சந்திக்க கடந்த 5 நாள்களுக்கு முன்னா் தில்லி உயா்நீதிமன்றத்திடம் அனுமதி கோரினாா்.
Advertisement
சிசோடியாவின் கோரிக்கையை பரிசீலித்த தில்லி உயா்நீதிமன்றம், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 7 மணி நேரத்திற்கு மட்டும் அவரது மனைவியைச் சந்திக்க அனுமதி அளித்ததோடு, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தல் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து, காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் திகாா் சிறையிலிருந்து, மதுரா சாலையில் உள்ள வீட்டிற்கு மனீஷ் சிசோடியா அழைத்து வரப்பட்டாா்.
கடந்த ஜூன் மாதத்தில் ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ நோயால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி சீமாவை சந்திக்க தில்லி உயா்நீதிமன்றம் மனீஷ் சிசோடியாவிற்கு அனுமதி வழங்கியது. இருப்பினும், அவரது மனைவியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரால் சந்திக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.