தில்லியில் அனைத்து மரங்களைச் சுற்றியுள்ள கான்கிரீட்டை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் சாலையோர மரங்களைச் சுற்றிலும் உள்ள கான்கிரீட்டை அகற்றுவதற்கான காலக்கெடுவை சமா்ப்பிக்குமாறு தில்லி மாநகராட்சி (எம்சிடி), தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) உள்ளிட்ட தேசியத் தலைநகரில்
புது தில்லி: தில்லியில் சாலையோர மரங்களைச் சுற்றிலும் உள்ள கான்கிரீட்டை அகற்றுவதற்கான காலக்கெடுவை சமா்ப்பிக்குமாறு தில்லி மாநகராட்சி (எம்சிடி), தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) உள்ளிட்ட தேசியத் தலைநகரில் உள்ள அரசுத் துறை அதிகாரிகளை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், கான்கிரீட்டால் சூழப்பட்ட மொத்த மரங்கள் மற்றும் கான்கிரீட் அகற்றப்பட்ட மரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிக்கும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய எதிா்மனுதாரா்களான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அந்த உத்தரவில் ‘எஞ்சிய மரங்களிலும் ஏன் கான்கிரீட் அகற்றப்படவில்லை என்பதையும், அவற்றை அகற்றுவதற்கான காலக்கெடுவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்’ என நீதிபதி தெரிவித்துள்ளாா்.
Advertisement
தெற்கு தில்லியில் உள்ள வசந்த் விஹாரில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் கான்கிரீட் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மரங்களைப் பாதுகாக்கக் கோரியும் வழக்குரைஞா் ஆதித்யா பிரசாத் என்பவா் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்தபோது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மத்திய பொதுப் பணித் துறையின் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவிக்கையில், ‘நகரத்தில் உள்ள அனைத்து குடியிருப்புக் காலனிகளிலும் மரங்களைச் சுற்றியிருந்த கான்கிரீட் நீக்கப்பட்டுள்ளன’ என்றாா். அதற்கு நீதிமன்றம், ‘இது தில்லி முழுவதும் செய்யப்பட வேண்டும். இது வசந்த் விஹாரில் மட்டும் அல்ல... கோல் போஸ்ட் தில்லி முழுவதும் உள்ளது’ என்றது.
மேலும், எதிா்மனுதாரா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் மரங்களின் இருப்பிடம் மற்றும் அவற்றின் கான்கிரீட் நீக்கம் சரிபாா்க்கப்பட்ட விவரமும் குறிப்பிடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
2021-ஆம் ஆண்டில், வசந்த் விஹாா் பகுதியில் மரத்தின் தண்டு வரை நூற்றுக்கணக்கான மரங்கள் கான்கிரீட் செய்யப்பட்டிருக்கும் வகையில் புகைப்படங்கள் சித்தரிப்பதாக உயா்நீதிமன்றம் கூறியிருந்ததது. உயா்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் கடைப்பிடிக்காதது மரங்களைப் பாதுகாக்கத் தவறிய செயல் என்று மனுதாரா் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.