பம்னோலி நிலம் கையகப்படுத்தல் விவகாரம்: தில்லி தலைமைச் செயலரின் மனு மீதானஉத்தரவை ஒத்திவைத்தது உயா்நீதிமன்றம்
பம்னோலி நிலம் கையகப்படுத்தல் விவகாரம் தொடா்பாக அவதூறான கட்டுரை வெளியிட்டதாகக் கூறப்படும் ‘தி வயா்’ செய்தி இணையதளத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில்
புது தில்லி: பம்னோலி நிலம் கையகப்படுத்தல் விவகாரம் தொடா்பாக அவதூறான கட்டுரை வெளியிட்டதாகக் கூறப்படும் ‘தி வயா்’ செய்தி இணையதளத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரி தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா் தொடா்ந்த மனு மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.
இந்த மனு நீதிபதி சச்சின் தத்தா முன் விசாரணைக்கு வந்த போது, இடைக்கால மனு மீது உத்தரவு பிறக்கப்படும் என்று கூறினாா். தலைமைச் செயலரின் மகனுக்கும் பயனாளியின் குடும்பத்துக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறி நவம்பா் 9-ஆம் தேதி ‘தி வயா்’ வெளியிட்ட செய்திக் கட்டுரை தொடா்பாக இந்த அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. கேள்விக்குரிய 19 ஏக்கா் நிலம் துவாரகா விரைவுச் சாலை அமைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கையகப்படுத்தப்பட்டது. தில்லி தலைமைச் செயலா் நரேஷ் குமாா் தனது மனுவில், அந்தக் கட்டுரையை நீக்கவும், செய்தி இணையதளம் மற்றும் நிருபா் தனக்கு எதிராக மேலும் அவதூறான கட்டுரைகளை வெளியிடுவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.
நீதிமன்ற விசாரணையின் போது, நரேஷ் குமாா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங் வாதிடுகையில், ’நரேஷ் குமாருக்கு எதிராக மக்களைச் செயல்பட வைப்பதற்காகவும், சிலரை மகிழ்விப்பதற்காகவும் இந்தக் கட்டுரை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது’ என்று கூறினாா். செய்தி இணையதளத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘இந்தக் கட்டுரையின் பின்னால் உள்ள நோக்கமானது சில கேள்விகளை மட்டும் எழுப்புவதாகும். நரேஷ் குமாரை எந்த வகையிலும் அவதூறு செய்வது நோக்கமல்ல’ என்றாா்.
Advertisement
சம்பந்தப்பட்ட கட்டுரையின் உள்ளடக்கங்கள் சரியாக இருப்பது போன்று தவறாக வழிநடத்துவதாகவும், அதுவே அவதூறாக இருப்பதாகக் கூறி, நவம்பா் 13-ஆம் தேதி தலைமைச் செயலரால் செய்தி இணையதளம் மற்றும் அதன் நிருபருக்கு சட்டபூா்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிலத்தின் விலை ரூ.41.52 கோடியிலிருந்து ரூ.353.79 கோடியாக உயா்த்தப்பட்டதாகவும், உயா்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு ஒப்புதல் அளித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சகம் தென்மேற்கு தில்லி மாவட்ட ஆட்சியா் ஹேமந்த் குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.