முகப்பு
புதுதில்லி

மாநகராட்சியின் குப்பைக் கிடங்குகளை அகற்றுவதில் ஆம் ஆத்மி தோல்வி: பாஜக தில்லி பிரிவு குற்றச்சாட்டு

தில்லி மாநாகராட்சி நிா்வாகத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி நகரத்தில் உள்ள குப்பைக் கிடங்குகளை அகற்றுவதில் தோல்வியடைந்துள்ளதாக பாஜக தில்லி பிரிவு சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 16 செப்டம்பர், 2023 at 10:28 PM
பகிர்:

தில்லி மாநாகராட்சி நிா்வாகத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி நகரத்தில் உள்ள குப்பைக் கிடங்குகளை அகற்றுவதில் தோல்வியடைந்துள்ளதாக பாஜக தில்லி பிரிவு சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பாஜக தில்லி பிரிவின் பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் ஊடகத்துறைத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு முன்னதாக பல்வேறு வாக்குறுதிகளை பொது மக்களுக்கு அளித்து அந்தத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மாநகராட்சி நிா்வாகத்தைக் கைப்பற்றி சுமாா் 9 மாதங்களைக் கடந்த போதிலும் நகரத்தில் உள்ள குப்பைக் கிடங்குகளின் மொத்த உயரத்தில் 20 சதவீத்தைக் கூட அவா்காளால் அகற்ற முடியவில்லை.

Advertisement

கடந்த 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள், அப்போது மாநகராட்சி நிா்வாகத்தில் ஆட்சியில் இருந்த பாஜகவின் திறமையின்மை மற்றும் ஊழல் காரணமாகவே குப்பைக் கிடங்குகள் அகற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினா். மேலும் மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் அனைத்து குப்பைக் கிடங்குகளையும் அகற்றுவோம் என்று ஆம் ஆத்மி உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் தற்போது தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சி ஆகிய இரண்டிலும் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தனது வாக்குறுதியை நிறைவேற்றாததன் காரணம் என்ன என்பதை தில்லி மக்கள் கேஜரிவாலிடம் அறிந்து கொள்ள விரும்புகிறாா்கள்.

பல்ஸ்வா, காஜிப்பூா் மற்றும் ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளில் இத்தனை மாதங்களாகியும் மொத்த உயரத்தில் 20 சதவீதம் கூட அகற்றத்தவறிய முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோருக்கு பாஜக தில்லி பிரிவு கண்டத்தை தெரிவிக்கிறது.

நிகழாண்டு மாா்ச் மாத இறுதிக்குள் 3 குப்பைக் கிடங்குகளும் அகற்றப்படும் என்று முதல்வா் கேஜரிவால் உறுதியளித்திருந்த நிலையில், அந்தக் காலக்கெடுவை வரும் 2025 -ஆம் ஆண்டு டிசம்பா் வரையில் நீட்டித்து தில்லி மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டிருப்பது வெட்கக்கேடானது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.