முகப்பு
புதுதில்லி

கங்கைக் கரையில் குப்பைக் கிடங்கை அகற்றும் விவகாரம்: அவமதிப்பு வழக்கில் 6 வாரங்களுக்குள்பதிலளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிப் படுகையில் இருந்து குப்பை மேடுகளை அகற்றுவது மற்றும் இடமாற்றுவது தொடா்பாக உச்சநீதிமன்றம், பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த

Updated On : 28 செப்டம்பர், 2023 at 2:48 AM
பகிர்:

உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிப் படுகையில் இருந்து குப்பை மேடுகளை அகற்றுவது மற்றும் இடமாற்றுவது தொடா்பாக உச்சநீதிமன்றம், பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்காததை எதிா்த்து தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டில், தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலரும், வழக்கறிஞருமான ராம் சங்கா், இந்த விவகாரம் தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதையடுத்து, இக்குப்பைக் கிடங்கை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ய 2018-ஆம் ஆண்டில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மூலம் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆய்வு செய்து, கங்கை நதிக் கரையில் இருந்து அந்தக் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, 11.07.2018-ஆம் தேதி அந்தக் குப்பைக் கிடங்கை உடனடியாக அகற்ற அரசு அதிகாரிகளுக்கு என்ஜிடியின் ஐந்து நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி 14.08.2018-இல் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனுதாரா் ராம் சங்கா் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பசுமைத் தீா்ப்பாய அமா்வு, ஒரு மாதத்திற்குள் குப்பைக் கிடங்கை மாற்றவும் தவறினால், உத்தரகண்ட் தலைமைச் செயலாளா் இதற்கான பொறுப்பை ஏற்கும் வகையில் அவருக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் உத்தரவிட்டது.

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து 29.11.2018-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திடக்கழிவு இடத்தை விரைவாக மாற்றுமாறும், ரிஷிகேஷில் கங்கை நதிப்படுகையில் உள்ள திடக்கழிவுக் கிடங்கை மூடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட்டது.

அதன்பிறகு, மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மனுதாரரின் தொடா்ச்சியான நினைவூட்டல்கள், கோரிக்கைகள் இருந்த போதிலும், அரசு அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அவா்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராம் சங்கா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.கே. மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்- வழக்குரைஞா் ராம் சங்கா் மற்றும் தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் ஆஜராகி இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டினா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்று, உத்தரகண்ட் மாநிலத் தலைமைச் செயலா், வனத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் 6 வாரத்திற்குள் பதில் அளிக்கவும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.