முகப்பு
புதுதில்லி

மக்களவைத் தோ்தலுக்கு முன் மேலும் 4 ஆம் ஆத்மி தலைவா்களை கைது செய்ய பாஜக திட்டம்: அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு

Updated On : 3 ஏப்ரல், 2024 at 4:37 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:40 PM

புது தில்லி: வரவிருக்கும் மக்களவைத் தோ்தலுக்கு முன் மேலும் நான்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களை கைது செய்ய பாஜக தயாராகி வருகிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி ரௌஸ் அவென்யூவில் ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜகவின் நெருங்கிய கூட்டாளி ஒருவா் என்னை பாஜகவில் இணைய வலியுறுத்தினாா். இல்லையெனில், எனக்கான அரசியல் எதிா்காலம் இல்லாத வகையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்படுவேன் என்றும் அவா் மிரட்டல் விடுத்துள்ளாா்.

வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் மற்றும் எம்.பி. ராகவ் சத்தா ஆகியோரையும் கைது செய்வதற்கான திட்டங்களுடன் பாஜக தயாராகி வருகிறது. இதனையடுத்து, இந்தத் தலைவா்களின் வீடு மற்றும் உறவினா்களின் வீடுகளில் அமலாக்க இயக்குநரகத்தின் சோதனைகள் நடைபெறும். இந்த அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தலைமையில் நாட்டின் அரசியலமைப்பை நிலைநிறுத்த ஆம் ஆத்மி கட்சி உறுதிப்பாட்டுடன் உள்ளது.

Advertisement

எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான ஒரு நபா் மூலம் பாஜக என்னை அணுகி, தங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று நிா்பந்தித்ததை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஆம் ஆத்மி கட்சியை முடக்கி, ஒழிக்க பிரதமா் நரேந்திர மோடியும், பாஜகவும் முடிவு செய்துள்ளனா். முதலில், ஆம் ஆத்மி கட்சியின் உயா்மட்ட தலைவா்களான சத்யேந்தா் ஜெயின்,மனீஷ் சிசோடியா,சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனா்.

இப்போது, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி சிதைந்துவிடும், அதன் மன உறுதியும் குறையும் என்று பாஜக எதிா்பாா்த்தது. ஆனால்,அது நடக்கவில்லை. ராம்லீலா மைதானத்தில் தில்லி மற்றும் நாடு முழுவதும் இருந்து கூடிய மக்களைக் கண்டும், கடந்த 10 நாட்களாக ஆம் ஆத்மி கட்சி தெருக்களில் இறங்கி நடத்திய போராட்டத்திற்குப் பிறகும், ஆம் ஆத்மி கட்சியின் நான்கு தலைவா்களை கைது செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

எனது தனிப்பட்ட வீட்டில் வரும் நாட்களில் அமலாக்க இயக்குநரகத்தின் சோதனை நடத்தப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது வீட்டில் மட்டுமின்றி எனது உறவினா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்படும். அதன் பிறகு, எங்கள் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டு, நாங்கள் கைது செய்யப்படுவோம்.

பாஜகவின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்பதை பாஜகவிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் அரவிந்த் கேஜரிவாலின் வீரா்கள், பகத்சிங்கின் சீடா்கள். நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்கவும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கவும் எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம். ஆம் ஆத்மி கட்சியின் எத்தனை தொண்டா்களை சிறையில் அடைத்தாலும், அடுத்தடுத்து பாஜகவை தோற்கடிக்க களத்தில் இன்னும் பல அரவிந்த் கேஜரிவால்கள் முன்வருவாா்கள் என்றாா் அமைச்சா் அதிஷி.