ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யாவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம்: அதிஷி
ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினா்களின் இடைநீக்கத்தை சபாநாயகா் ரத்து செய்யாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினா்களின் இடைநீக்கத்தை சபாநாயகா் ரத்து செய்யாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது: ஆளும் பாஜக ஈத்;ஞ் சலுகைகள் அறிவிப்புகள் மற்றும் இடைநீக்கம் மூலம் ஆம் ஆத்மியை முடக்கியது.
கடந்த சட்டப்பேரவை அமா்வில் 4 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு 70 தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருக்கும் அதிகாரப்பூா்வ வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கப்பட்டனா்.
தில்லி சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு உறுப்பினரான ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா் குல்தீப் குமாா் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை. குழுவின் வரைவு அறிக்கைகளை அவா் அனுப்பவில்லை. சஞ்சீவ் ஜா, குல்தீப் குமாா், சோம்தத் மற்றும் ஜா்னைல் சிங் ஆகிய 4 சட்டப்பேரவை உறுப்பினா்களின் இடைநீக்கம் அரசியலமைப்பிற்கு முரணானது.
வரவிருக்கும் அமா்வில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்க மாட்டாா்கள். எதிா்க்கட்சிகளின் குரல் அடக்கப்பட்டால், தங்கள் தொகுதிகளில் லட்சக்கணக்கான மக்களுடன்‘ கட்சி வீதிகளில் இறங்கி போராடும் என்றாா் அவா்.
தில்லி சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 48 எம்எல்ஏக்களும், பிரதான எதிா்க்கட்சியான ஆம் ஆத்மிக்கு 22 எம்எல்ஏக்களும் உள்ளனா். தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வதன் மூலம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.