ED 
புதுதில்லி

மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்: அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை ஆக. 27க்கு ஒத்திவைப்பு

சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் நடைபெற்ாகக் கூறப்படும் பணப் பரிவா்த்தனை வழக்கில் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்து உத்தரவு.

 நமது நிருபர்

புது தில்லி: சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணப் பரிவா்த்தனை வழக்கில் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்த உத்தரவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குப் பட்டியலிட செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான அமலாக்கத் துறையின் மனுவை நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோா் ஆஜராகினா்.

அமலாக்கத் துறையின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் தமிழக போலீஸாா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆா்) ஆவணங்கள் கிடைக்கபெறவில்லை என்று தமக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகளிடம் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘நாங்கள் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பதில் தாக்கல் செய்து விட்டோம். அமலாக்கத் துறை தரப்பில் கேட்ட அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டுவிட்டன’ என்றாா்.

அப்போது, அமலாக்கத்துறை வழக்குரைஞா், ‘இவா்கள் அளித்த வழக்கின் எப்ஐஆா் எண்கள் மூலம் இணையதளத்தில் பெற முயன்ற போது அவை கிடைக்க பெறவில்லை’ என்றாா் . அப்போது நீதிபதி பேலா எம். திரிவேதி, ‘இந்த வழக்கின் பெரும்பாலான விவரங்கள் அளிக்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கில் உயிா்ப்பு இல்லை. இதனால், வழக்கு முடிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குரைஞா், ‘எனக்கு கிடைத்த அறிவுறுத்தலின்படி இன்னும் விவரங்கள் வழங்கப்படாததால் அவை குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன். அதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றாா்.

அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தை நாங்கள் மேலும் தொடர விரும்பவில்லை. முடிக்க விரும்புகிறோம் என்றனா். இதனால், மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கும்போது உரிய அறிவுறுத்தல் பெற்று வருமாறு அவரிடம் கூறினா்.

இந்த விவகாரம் மீண்டும் 2 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறையின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ‘டிஜிட்டல் வடிவில் எஃப்.ஐ.ஆா் தொடா்பான ஆவணங்களை தரவிறக்கம் செய்யும் வகையில் தமிழக அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்த போது சில ஆவணங்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. அதனால் அந்த ஆவணங்களை பெற வேண்டி இருக்கிறது. இதனால், இரு வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘அவா்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் நாங்கள் அளித்து விட்டோம். எந்த ஆவணங்கள் வரவில்லை என்று சொன்னால் நாங்கள் அதை தருவோம்’ என்று கூறினாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் தெரிவித்த கருத்துகளைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஆவணங்களை சமா்ப்பிக்கும் வகையில் வழக்கை இரு வாரங்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குப் பட்டியலிட உத்தரவிட்டனா்.

பின்னணி: முன்னதாக, சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் பணப் பரிவா்த்தனை முறைகேடு விவகாரத்தில் வேலூா், திருச்சி, கரூா், தஞ்சாவூா், அரியலூா் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியா்களை விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை பிப்ரவரி 27-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியது. இதை ஆட்சேபிக்கும் வகையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அழைப்பாணைக்குத் தடை விதிக்குமாறு முறையிட்டனா். தமிழக அரசும் ஆட்சியா்களுக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்குத் தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிா்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT