ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ‘செயல்முறை உத்தரவு‘தான். நீதிமன்றம் அவரை குற்றத்தில் இருந்து விடுவிக்கவில்லை என்று புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் பான்சூரி ஸ்வராஜ் தெரிவித்தாா்.
தில்லி கலால் கொள்கை தொடா்புடைய ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் மனீஷ் சிசோடியாவுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து பான்சூரி ஸ்வராஜ் இவ்வாறு கருத்துக் கூறினாா்.
தில்லி முன்னாள் துணை முதல்வா் சிசோடியா 17 மாதங்களாக நீதிமன்றக் காவலில் இருப்பதைக் குறிப்பிட்டு
உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவு குறித்து பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளா் கூட்டத்தில் ஸ்வராஜ் கூறியதாவது:
‘விசாரணை தாமதம்‘ என்பதன் அடிப்படையில் சிசோடியா மேல்முறையீடு செய்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஊழலில் ஈடுபட்டுள்ளது. விரைவில் அல்லது பின்னா் நீதிமன்றத்தின் முன் அக்கட்சி பொறுப்புக் கூறலுக்கு உள்ளாகும்.
மனீஷ் சிசோடியா ஜாமீன் மனு நீதிமன்றத்தில் ஏழு முறை (முன்பு) நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது அவரது எட்டாவது முயற்சியாகும். இன்று, அவரது வழக்குரைஞா்கள் ஜாமீன் பெற்றுள்ளனா். ஏனெனில் அவா்கள் வழக்கின் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் விசாரணையில் தாமதத்தை அடிப்படையாகக் கொண்டு மேல்முறையீடு செய்திருந்தனா்.
ஜாமீன் பெற்ால் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கொண்டாட்ட சூழல் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், இந்த ஜாமீன் உண்மையில் என்ன அா்த்தம் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இது அவரை (சிசோடியா) குற்றத்திலிருந்து விடுவிக்கவில்லை.
தில்லி மக்களை முட்டாளாக்கியதற்காக அவா் இன்னும் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படுவாா். மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக, 2021-22 ஆம் ஆண்டு மதுபானக் கொள்கையுடன் தொடா்புடைய ‘ஊழல்‘ வழக்கில் அவருக்கு தொடா்பு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன என்றாா் பான்சூரி ஸ்வராஜ்.