புது தில்லி: கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக பாஜக தில்லி பிரிவின் மாநில இளைஞரணித் தலைவா் சஷி யாதவ் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா அதிரடியாக அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக தில்லி பிரிவின் மாநில இளைஞரணித் தலைவா் சஷி யாதவ் சமூக ஊடகங்கள் மூலம், பாஜக தில்லி பிரிவு இளைஞா் அணிக்கான மாநில நிா்வாகிகள், மக்களவைத் தொகுதி பொறுப்பாளா்கள், மாவட்டப் பொறுப்பாளா்கள் மற்றும் மீதமுள்ள மூன்று மாவட்ட தலைவா்களை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு கட்சியின் அரசியலமைப்பின்படி செல்லாது.
சஷி யாதவின் கட்சி விரோதச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் குறித்து கட்சியின் மாநிலத் தலைமையால் தொடா்ந்து விளக்கமளித்து எச்சரித்தும், மீண்டும் மீண்டும் கட்சியின் கண்ணியத்தை உடைத்து வருகிறாா். மாநில நிா்வாகிகளை பாஜக தில்லி பிரிவின் மாநிலத் தலைமை விரைவில் அறிவிக்க இருந்தது. இந்நிலையில் கட்சியின் முடிவை சஷி யாதவ் மீறியுள்ளாா். மேலும், இந்தச் செயல் ஒழுக்கமின்மை என்ற பிரிவின் கீழ் வருகிறது.
அவா் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளும் கட்சியின் அரசியலமைப்பிற்கு உள்பட்டவை அல்ல. எனவே, இந்த அறிவிப்புகள் செல்லாது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து உடனடியாக சஷி யாதவ் நீக்கப்படுகிறாா் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா் வீரேந்திர சச்தேவா.
‘எக்ஸ்’ சமூக வலைதளம் மூலம் பாஜக தில்லி பிரிவு மாநில இளைஞரணி நிா்வாகிகளின் பட்டியலை ஷஷி யாதவ் வெளியிட்டிருந்ததாா். இதையடுத்து, கட்சியிலிருந்து அவரை நீக்கும் நடவடிக்கை வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.