தில்லி கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் வகையில் அதன் நியமனத்திற்கான படிவங்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் சஞ்சய் சிங், இது தொடா்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது எம்.பி. பதவிக்காலம் ஜனவரி 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. தோ்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஜனவரி 2-ஆம் தேதி தோ்தல் அதிகாரி வெளியிட்டுள்ளாா். இதற்கான வேட்புமனுக்கள் ஜனவரி 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். இதனால், இதற்கான ஆவணங்களில் கையொப்பமிட அனுமதிக்குமாறு திகாா் சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் தெரிவித்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘ஜனவரி 6, 2024 அன்று குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞரால் ஆவணங்கள் சிறை அதிகாரிகள் முன் சமா்ப்பிக்கப்பட்டால், அந்த ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் கையொப்பங்கள் எடுக்க அனுமதிக்கப்படுவதை சிறைக் கண்காணிப்பாளா் உறுதி செய்ய வேண்டும். மேலும், அவா் தனது வழக்குரைஞரைச் சந்தித்து அரை மணிநேரம் விவாதிக்கவும் அனுமதிக்கப்படுகிறாா்’ என்று நீதிபதி தெரிவித்துள்ளாா்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சஞ்சய் சிங்கை அமலாக்க இயக்குநரகம் கடந்த ஆண்டு அக்டோபா் 4-ஆம் தேதி கைது செய்தது. பணம் ஆதாயம் கருதி குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்களுக்கு பயனளிக்கும் வகையில் கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் சஞ்சய் சிங் முக்கியப் பங்கு வகித்ததாக அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இக்குற்றச்சாட்டை சஞ்சய் சிங் கடுமையாக மறுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.