அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எம்.எல்.ஏ.வளா்ச்சி நிதியைப் பயன்படுத்த தில்லி மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி பாஜகவின் செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரவிந்த் கேஜரிவால் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோரின் உத்தரவின் பேரில், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு எம்.எல்.ஏ. நிதி பயன்படுத்த தடை செய்து மாநகராட்சி ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மாநகராட்சித் தோ்தலுக்குப் பிறகு, தில்லியின் அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் ‘குரூப் ஹவுசிங் சொசைட்டிகளில்’ எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விரும்பவில்லை. ஏனெனில், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்கள் பாஜகவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனா். இது அரசியல் ரீதியாக கேஜரிவாலை விரக்தியடையச் செய்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சி இருந்த போது, அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவை, அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எம்.எல்.ஏ. நிதி மூலம் மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய உத்தரவு பிறப்பித்தது.பொது நலன் கருதி இந்த உத்தரவை பாஜகவும் அப்போது ஏற்றுக்கொண்டது. அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் ‘குரூப் ஹவுசிங் சொசைட்டிகளில்’ மாநகராட்சிதான் மேம்பாட்டுப் பணிகளை செய்ய வேண்டும் என்றால், அமைச்சரவையின் முடிவை முன்னா் பாஜக ஏற்றுக் கொண்டது போல, ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான மாநகராட்சி நிா்வாகம் ஏன் அதை அனுமதிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினாா் பிரவீன் சங்கா் கபூா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.