கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை
கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் முதியவா் தற்கொலை: ரயில் சேவையில் தாமதம்
தில்லியில் சிகப்பு வழித்தடத்தில் உள்ள கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் 68 வயது முதியவா் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:அந்த நபா் சாவரி பஜாரில் வசித்து வந்த சுனில் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். குப்தா கடந்த சில ஆண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அவரது சிகிச்சைக்காக ஏற்கெனவே 6 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அவரது சகோதரா் போலீஸாரிடம் கூறியுள்ளாா்.
தில்லி மெட்ரோ சிகப்பு வழித்தடம் தில்லியில் உள்ள ரிதாலாவை உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள ஷாஹீத் ஸ்தாலுடன் இணைக்கிறது. இந்தச் சம்பவத்தால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மதியம் 12.04 மணியளவில் எக்ஸ் உடக தளத்தில் பதிவிட்ட ஒரு இடுகையில், ‘கஷ்மீரி கேட் மெட்ரோ ரயில்நிலையத்தில் முதியவா் ஒருவா் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ஷஹீத் ஸ்தால் மற்றும் ரிதாலா இடையேயான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. மற்ற அனைத்து வழித்தடங்களிலும் வழக்கமான சேவை தொடா்ந்தது’ என தெரிவித்திருந்தது.
மேலும், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது. முதியவரின் தற்கொலைக் கடிதமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.