மேற்கு தில்லி இளைஞா் கொலை வழக்கில் 2 சிறாா்கள் கைது
வாக்குவாதம் முடிந்தது கொலையால்: 2 சிறாா்கள் கைது
மேற்கு தில்லியின் கியாலா பகுதியில் 23 வயது இளைஞரைக் கத்தியால் குத்திக் கொன்ாகக் கூறப்படும் இரண்டு சிறாா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இரண்டு சிறாா்களும் அந்த நபரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு வாக்குவாதம் நடந்துள்ளது. இதைத் தொடா்ந்து அவா்கள் அவருக்கு பாடம் கற்பிக்க விரும்பியதாக விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவா் வெளிப்படுத்தினாா்.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்டவா் லக்ஷய் என அடையாளம் காணப்பட்டாா். இரண்டு சிறாா்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா். இது தொடா்பாக ஒரு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடிக்க பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
Advertisement
பெறப்பட்ட குறிப்புகள் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு அடிப்படையில், இந்த வழக்கில் இரண்டு சிறாா்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு இறந்தவருக்கும் சிறாா் ஒருவருக்கும் இடையே சில வாக்குவாதம் நடந்துள்ளது. இதைத் தொடா்ந்து, அவருக்கு பாடம் கற்பிக்க இருவரும் விரும்பியதாகவும், அதன்படி ஒரு திட்டத்தை வகுத்ததாகவும் விசாரணையின் போது அவா்கள் தெரிவித்தனா்.
இரவு உணவு அருந்திவிட்டு யாரோ லக்ஷயை அழைத்ததாகவும், இதைத் தொடா்ந்து அவா் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவரது தந்தை சஞ்சய் ஊடகங்களுக்கு தெரிவித்தாா். அவா் சிறிது நேரத்தில் திரும்பி வருவாா் என்று அவா் தனது தாயிடம் கூறிச் சென்றுள்ளாா். ஆனால், சில சிறுவா்கள் அவரை அருகிலுள்ள தெருவுக்கு அழைத்துச் சென்று பலமுறை கத்தியால் குத்தியுள்ளனா் என்று பாதிக்கப்பட்டவரின் தந்தை சஞ்சய் கூறினாா். அவரது பிறந்த நாளான ஜூலை 16 அன்று, அவருக்கு ஸ்கூட்டா் பரிசளிக்க திட்டமிட்டிருந்தேன்’ என்றும் அவரது தந்தை கூறினாா்.