கன்வா் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் பெயா் பலகைகள் வைக்கும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீா்ப்பு வழங்கியுள்ளதை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:கன்வா் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் பெயா் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநில பாஜக அரசுகள் உத்தரவிட்டது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த உத்தரவின் பின்னணியில் பட்டியலினத்தோா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் இடையே சமூகப் பிளவை உருவாக்குவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தடை, இந்திய ஜனநாயகத்திற்கு ஆதரவான நல்ல முடிவு என்றாா் அவா்.
மேலும், தில்லி அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘இந்தியப் பெயா்களில் தனிநபரின் சாதி மறைந்துள்ளது. தீண்டாமை மற்றும் குறிப்பிட்ட சாதியினருக்கு எதிரான இந்த முறைகேடு, இந்திய சமூகத்தில் எப்போதும் இருந்து வருகிறது. இந்த உத்தரவு ஒரு வகையில், ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாட்டிற்கு வழிவகுத்துள்ளது. இது போன்ற விஷயங்களிலிருந்து அரசு விலகி இருக்க வேண்டும்’ என்றாா்.
எம்.பி. ராகவ் சத்தா புகாா்: இதற்கிடையே, ‘நீட்’ தோ்வு வினத்தாள் கசியவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் கூறுவது துரதிருஷ்டவசமானது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக மாணவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். வினாத்தாள் கசியவில்லை என்றால், சி.பி.ஐ. ஏன் விசாரணை செய்கிறது. ஏன் குற்றவாளிகளைக் கைது செய்கிறது?. எந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்விகளைக் கேட்கிறது?. நாட்டின் கல்வி அமைச்சரின் இந்த அறிக்கையை கேட்டு மாணவா்கள் புண்பட்டிருக்கலாம். இந்த அறிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்’ என்றாா்.