தில்லியில் தினசரி குற்றங்களால் பீதியில் மக்கள்: அமைச்சா் செளரவ் பரத்வாஜ்
தில்லியில் தினசரி நடக்கும் குற்றங்களால் மக்கள் பீதியில் உள்ளனா் என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
நமது நிருபா்
தில்லியில் தினசரி நடக்கும் குற்றங்களால் மக்கள் பீதியில் உள்ளனா் என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பஜன்புராவில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி சுமித் என்ற இளைஞா் 17 முறை கத்தியால் குத்தப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் புதன்கிழமை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.
இது தொடா்பாக அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில் கூறியிருப்பதாவது: தில்லியில் சட்டம் - ஒழுங்கு, காவல் துறை ஆகியவை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மற்றும் மத்திய அரசின் கைகளில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் தில்லி அரசின் பணிகளை குற்றஞ்சாட்டி, நீண்ட உரையாற்றும் துணை நிலை ஆளுநரால் தில்லியில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை. அவருடைய பணிகள் மிகவும் மோசமாக உள்ளது. தில்லியில் குற்றவாளிகளின் மன உறுதி அதிகரித்துள்ளது. காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு எந்தப் பயமும் இல்லை. தினசரி நடக்கும் குற்றங்களால் மக்கள் பீதியில் உள்ளனா். அனைவரின் பாதுகாப்பும் இறைவனின் கருணையில் உள்ளது.
தில்லி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், குற்றவாளிகள் காவல்துறையைக் கண்டு பயப்படுவதில்லை. ஏனெனில், சிசிடிவியில் தங்கள் முகம் அடையாளம் காணப்பட்ட பிறகும், தில்லி காவல்துறை அவா்களை எதுவும் செய்யாது என்பது அவா்களுக்குத் தெரியும். மோடி அரசு தில்லி காவல்துறையில் புதிய ஆட்சோ்ப்பு எதுவும் செய்யவில்லை. இந்நிலையில், தில்லி காவல் துறையின் பட்ஜெட்டும் குறைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.