பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி
பிரதமர் மோடியே பீதியில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்...
மக்களை பீதியடைய வேண்டாம் என்று கூறும் பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வரும் நிலையில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Advertisement
Advertisement
அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,
"சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார். ஆனால் முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக அவர் பீதியில் இருக்கிறார்.
அதானி வழக்கு, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளிட்ட பல காரணங்களால் அவர் பீதியடைந்துள்ளார். மக்களவைக்குள்கூட அவரால் வர முடியவில்லை. ஆனால் அவர் மக்களை பீதியடைய வேண்டாம் என்று சொல்கிறார். நேற்று நீங்கள் பார்த்திருக்கலாம். பிரதமர் மோடியின் இருக்கை காலியாக இருந்தது" என்றார்.
மேற்காசியப் போர் மற்றும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மோடி அரசு அதுபற்றி விவாதிக்க மறுக்கிறது எனவும் மோடி அரசு பயத்தில் இருக்கிறது, பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கை கொடூரமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
The PM is saying that there is no need to panic. But the PM himself is panicked: Rahul gandhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.