'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி...
மக்களவையில் தான் கூறிய '16' எண் குறித்த புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிட மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது, "மக்களவையில் இந்த 3 மசோதாக்கள் மீது நேற்று பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது, நான் இங்கே அமர்ந்து அதனை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் உற்சாகம் குறைந்து உடைந்த நிலையில் இருந்தார். அவரால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்றது தவறு என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவரால் இதில் ஈடுபட முடியவில்லை. அப்போதுதான் என்னுடைய போனில் தேதியைக் கவனித்தேன். ஏப்ரல் 16. அப்போதுதான் தெளிவாக புரிந்தது. இந்த 16 என்ற எண்தான் புதிருக்கான விடை. இந்த 16 என்ற எண்ணில்தான் எல்லாம் இருக்கிறது" என்று கூறினார்.
Advertisement
மேலும் உங்களுக்கு இதற்கான விடை தெரிந்தால் எனக்கு தகவல் அனுப்பலாம் என்று கூறி, உங்கள்(பாஜக) பிரச்னைகான பதிலும் இந்த 16 என்ற எண்ணில்தான் உள்ளது, அதனை நீங்கள் விரைவில் கண்டடைவீர்கள் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி கைகாட்டி ராகுல் பேசினார்.
இதையடுத்து 16 என்ற எண் எதைக் குறிக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி,
"இது ஒரு புதிர். இதற்கான விடையை நான் அவ்வளவு எளிதாக சொல்லிவிட மாட்டேன். ஒருவேளை நான் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்தால், 'இதுதான் அது' என்று உங்களிடம் கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுலின் பேச்சைப் பகிர்ந்து, "சிக்ஸ்டீன் என்ற சொல்லின் ஒலி 'எப்ஸ்டீனைப் போல் இருக்கிறது அல்லவா!' என்று பதிவிட்டுள்ளது.
ராகுலும் '16' என்ற எண்ணை ஒரு பிரச்னையாகக் குறிப்பிட்டு அதற்கு தீர்வு கண்டுபிடித்தால் சொல்கிறேன் என்று கூறுகிறார்.
ராகுல் கூறிய '16' தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.