டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு
பொன்னேரியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு
தமிழ் மக்களின் மகத்துவம் பற்றி பஜவினருக்குத் தெரியவில்லை என்று பொன்னேரியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்யும்பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப். 18) சென்னை வந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி,
Advertisement
"இயற்கையாகவே தமிழக மக்களுடன் எனது உறவு மேம்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வருவது, உரையாற்றுவது எனக்கு எப்போதுமே மரியாதைக்குரிய விஷயமாகும். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் அல்ல, தமிழ்நாட்டில் பிறக்கவில்லை, எனது குடும்பம் தமிழ்நாடு அல்ல. ஆனால், தமிழ்நாட்டுடன் எப்போதுமே என்னுடைய உணர்வுகள் ஒன்றியிருக்கின்றன.
பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் எப்போதெல்லாம் தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, கலாசாரத்தைத் தாக்குகிறார்களோ அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக உணர்ந்திருக்கிறேன்.
நேற்று நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ன்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவந்தார்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. தென் மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களின் வலிமையைக் குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.
அந்த மசோதாவை நாம் தோற்கடித்து முறியடித்தோம். அந்த மசோதாவின் பின்னால் உள்ள திட்டத்தை முறியடித்தோம்.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுடைய மொழி, கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை இருக்கிறது.
ஒரே நாடு, ஒரே மொழி என்று பிரதமர் மோடி சொல்லும்போது அவர் அரசமைப்புச் சட்டத்தையே தாக்குகிறார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் எதைச் செய்ய நினைக்கிறார்கள் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அன்று ராணுவம் மூலமாக போர் தொடுத்தனர், இன்று ராணுவம் இன்றி போர் தொடுக்கிறது பாஜக.
தமிழ் வரலாறு, மொழி. கலாசாரம் ஆகியவற்றை அழிக்க நினைக்கிறார்கள், அவர்களால் ஒருபோதும் அதனைச் செய்ய முடியாது.
தமிழ் மக்களின் மகத்துவம் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆயிரம் ஆயிரமாண்டு கால வரலாற்றை தமிழர்கள் வைத்திருக்கிறார்கள்.
பாஜகவினருக்கு என்ன தேவை என்றால், அவர்கள் சொல்வதைக் கேட்க, தில்லியிலிருந்து தமிழகத்தை ஆள தமிழகத்தில் ஒரு கூட்டாளி தேவை. அமித் ஷா, நரேந்திர மோடி சொல்வதைக் கேட்க அவர்களின் உத்தரவுகளைச் செயல்படுத்த அவர்களுக்கு ஒரு முதல்வர் வேண்டும்.
உலகளவில் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்தியாவில் சமரசமான ஒரு மோடி எப்படி தேவையோ, அதுபோல தில்லிக்கு பாஜகவினருக்கு தமிழகத்தில் அவர்கள் சொல்வதைக் கேட்க ஒரு முதல்வர் வேண்டும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் தமிழனத்திற்கு எதிரானவர்கள். தமிழ் வரலாறு, மொழி கலாசாரம் ஆகியவற்றை பாஜகவால் தொடக்கூட முடியாது" என்று பேசினார்.